என்னடா இப்படி இறங்கிட்டீங்க..கடனை திருப்பிக் கேட்டது குத்தமா? கலெக்சன் ஏஜெண்டின் கதை முடித்த கும்பல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிதி நிறுவன ஊழியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என சொன்ன ஊழியரால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்திருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களில் திண்டுக்கல்லில் அதிக அளவில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வன்னியபாறைப்பட்டி முனியப்பன் என்பவரின் மகன் நாகராஜ். இவர் வினோத் என்பவரிடம் பைனான்ஸ் ஒன்றில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய கோட்டை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் பணம் வசூல் செய்யப் போகும் பொழுது குளிப்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கரமான ஆயுதங்களை வைத்து நாகராஜனை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இச்சம்பவம் கண்டு பதறி அடித்துக் கொண்டு ஓடினர். சம்பவம் அறிந்து வந்த தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.
முன்பகை காரணமா? பணம் கொடுக்கல் வாங்கல் ஏதேனும் பிரச்சனையா? என விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கமுத்து, பாலசுப்பிரமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

அப்போது நாகராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் குழந்தைபட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 21), மாதவன் (23), கிரி (21 ), சுகுமார் (24), விக்னேஸ்வரன் (23), குளிபட்டியைச் சேர்ந்த விஜய் (23) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் பெரியகோட்டையில் பதுங்கி இருந்த போது அவர்களை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து கொலையாளிகள்
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதில் பிடிபட்ட மகேந்திரனின் உறவினர் ஒருவர், நாகராஜ் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அப்போது கடன் வசூலிக்க நாகராஜ் சென்ற போது மகேந்திரனுக்கும் நாகராஜுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி மகேந்திரன் உள்ளிட்ட 6 பேரும் குளிப்பட்டியில் நாகராஜ் வருகைக்காக பதுங்கி காத்திருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மகேந்திரன், மாதவன், கிரி, விஜய், சுகுமார், விக்னேஸ்வரன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications