6000 ஏக்கரில் மகாபலிபுரத்தில் புது சட்டசபை! ஊழலுக்கு திமுக திட்டம்! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
திண்டுக்கல்: ‛‛திமுக அரசு பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டசபையை மகாபலிபுரத்திற்கு மாற்றும் வேலைகளை துவங்கி உள்ளது. இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சட்டசபை பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளனர். இதனை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது'' என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
Recommended Video
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் சாமி தரிசனத்துக்கு அண்ணாமலை சென்றார்.
இறுகும் பிடி... விக்னேஷ் லாக் அப் மரணம் தொடர்பாக மேலும் 4 காவலர்கள் கைது
அங்கு அவர் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
லூலூ மார்க்கெட்டுக்கு எதிர்ப்பு
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் அனைத்தும், தற்போது லூலூ நிறுவன விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் லூலூ மால் அமைக்கும் நோக்கத்தில் ஒரு செங்கல் வைக்க கூட பாஜக அனுமதிக்காது. சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிடமாட்டோம். இந்த நிறுவனத்தால் சாலையோ மளிகைக்கடை அண்ணாச்சி, பூக்கடை அக்கா, சிறுவியாபாரம் செய்யும் அண்ணன் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படுவர்.
ஆளுநர் கருத்து தவறாக இருக்காது
தமிழக ஆளுநர் சாதாரண நபர் கிடையாது. உளவுத்துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் கொண்டுள்ளார். நாகாலந்தில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். இவரது கருத்துகள் தவறாக இருக்காது. கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்கமாட்டார்கள்.
இருப்பை காட்டி கொள்ள...
திமுகவின் கூட்டணி கட்சிகள் தங்கள் இருப்பை காட்ட விரும்புகின்றன. இதனால் தான் தினமும் ஆளுநரை வசைபாடி திமுக மீதான விசுவாசத்தை காட்டு கொள்கின்றன. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
மகாபலிபுரத்தில் புதிய சட்டசபை
திமுகவின் ஓராண்டு ஆட்சி சட்டசபைக்குள் சாதனையாகவும், சட்டசபைக்கு வெளியே சோதனையாகவும் இருக்கிறது. திமுக அரசு பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டசபையை மகாபலிபுரத்திற்கு மாற்றும் வேலைகளை துவங்கி உள்ளது. இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சட்டசபை பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளனர். இதை பாஜக எதிர்க்கும் என்பதற்காக சில திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர்.
ஒருபோதும் அனுமதிக்காது
மேலும் அங்கு திமுக அலுவலகம் அமைக்க இடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக திமுகவை சேர்ந்த 6 அமைச்சர்கள் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் நூறு ஏக்கர் வரை நிலம் வாங்கியுள்ளனர். திமுகவின் கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டசபை அமைக்க முயற்சிக்கின்றனர். புதிய சட்டசபை குறித்த அறிவிப்பு எந்நேரமும் வரலாம். இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது" என்றார்.
பல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பு
இதற்கிடையே, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன். தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் தமிழக பாஜக என்றும் மக்களோடு இருக்கும். மேலும் இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும். சிஷ்யர்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன்'' என கூறியுள்ளார்.