அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் வருகை- உற்சாக ஏற்பாடுகள் மும்முரம்!
திண்டுக்கல்: தமிழக அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருகிறார். திண்டுக்கல் மாவட்டத்துக்கு அமைச்சர் உதயநிதி மு.க.ஸ்டாலின் முதல் முறையாக வருகை தருவதை முன்னிட்டு உற்சாகமான ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டுள்ளனர். கின்னஸ் சாதனையாக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடு விழாவிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இடம்பெற்றுள்ளார். சட்டசபை தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக ஆட்சி அமைத்த போதே உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்து 19 மாதங்களுக்குப் பின்னரே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சரான பின்னர் முதல் முறையாக இன்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பாக உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை திண்டுக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடைரோடு டோல்கேட் மற்றும் தோமையார்புரம் ஆகிய இடங்களில் திமுக கொடியேற்றுகிறார். பின்னர் பேகம்பூரில் மூத்த திமுக தலைவர் பஷீர் அகமது இல்லத்துக்கு சென்று அவரது மறைவுக்காக குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவிக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து இன்று இரவு திண்டுக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்குகிறார்.

பின்னர் நாளை திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் திமுக கொடியேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து இலல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வாலிபால் மைதான மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
திண்டுக்கல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வேடசந்தூர் ஆத்துமேடு, நால்ரோடு ஆகிய இடங்களில் திமுக கொடியேற்றுகிறார். அங்கிருந்து இடையகோட்டை சென்று அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் கின்னஸ் சாதனையாக 6 மணிநேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைக்கிறார். இடையகோட்டையில் இருந்து திண்டுக்கல் திரும்பி அங்குவிலாஸ் பள்ளியில் திமுகவினருக்கு பொற்கிழி வழங்குதல், சிறுமலை பிரிவு, சாணார்பட்டி, நத்தத்தில் திமுக கொடியை ஏற்றுகிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளை மூத்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் பழனி எம்.எல்.ஏ.வும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ஐபி செந்தில்குமார் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம், விளையாட்டு விடுதிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இதனால் மாவட்ட விளையாட்டு அரங்கம், விளையாட்டு விடுதி, நீச்சல் குளம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. 2003-ம் ஆண்டு இவை கட்டப்பட்டன. தற்போது இவை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன.
திண்டுக்கல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சிவகங்கை மாவட்டம் செல்கிறார் அமைச்சர் உதயநிதி. அங்கு சனிக்கிழமையன்று பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications