திண்டுக்கல், மணப்பாறையில் சொந்த தகராறுகளில் துப்பாக்கிச் சூடு- 2 மாஜி ராணுவ வீரர்கள் அதிரடி கைது!
திண்டுக்கல்லில் துப்பாக்கி சூடு நடத்திய மாஜி ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் மணப்பாறையில் சொந்த தகராறு விவகாரங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் 2 முன்னாள் ராணுவ வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் பாபு என்பவர் தகராறு ஒன்றில் கொல்லப்பட்டார். இதனையடுத்து திமுக கவுன்சிலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரசாரம் செய்யப்பட்டது. பாஜகவும் இந்த பிரச்சனையில் உண்ணாவிரதம் இருந்தது.

அப்போது பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்பவர், ராணுவத்தினருக்கு வெடிகுண்டு வைக்க தெரியும்; தமிழ்நாட்டிலும் வெடிகுண்டு வைப்போம். இது மிரட்டல்தான் என ஆவேசமாக பேசினார். இதனையடுத்து கர்னல் பாண்டியன் மீது வழக்குகள் பாய்ந்தன.
இந்நிலையில் திண்டுக்கல், மணப்பாறையில் துப்பாக்கி சூடு நடத்தியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அச்சுறுத்திய 2 முன்னாள் ராணுவ வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கோடைவாசஸ்தலம் சிறுமலை. கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சி இது. இப்பகுதியில் தனபால் என்ற முன்னாள் ராணுவ வீரருக்கும் ராஜ்கண்ணு, கருப்பையா ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வாக்குவாதத்தின் போது தனபால் தம்மிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் பதற்றத்துடன் அப்பகுதிக்கு ஓடி வந்தனர். ஆனால் சிறுமலைக்கு தப்பி ஓடி தனபால் பதுங்கி கொண்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜ்கண்ணு, கருப்பையா இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிறுமலையில் பதுங்கி இருந்த தன்பாலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மணப்பாறை பகுதியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணப்பாறை உடையார்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது ஆடுகள் மீது முன்னாள் ராணுவ வீரர் தாமஸ் ஜான் பிரிட்டோ என்பவரது வாகனம் மோதியுள்ளது. இவர் தற்போது டிஎன்பிஎல் ஆலையில் பாதுகாவலராக இருந்து வருகிறார். ஆடுகள் மோதியது தொடர்பாக ராஜ்குமார், தாமஸ் ஜான் பிரிட்டோ இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது தாமஸ் ஜான் பிரிட்டோ கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனை அப்படியே வீடியோவாக படம்பிடித்து போலீசில் புகார் தெரிவித்துவிட்டார் ராஜ்குமார். இந்த புகாரின் அடிப்படையில் ஜான் பிரிட்டோவை போலீசார் கைது செய்தனர். ஆன்லைனில் துப்பாக்கியை ஆர்டர் செய்து ஜான்பிரிட்டோ வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications