திகுதிகு திருப்பதி லட்டு விவகாரம்.. ஆக்ஷனில் இறங்கிய ஆந்திரா! கைதாகிறாரா ஏஆர் டெய்ரி உரிமையாளர்?
திண்டுக்கல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக பகிர் புகார் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏஆர் டைரி நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதன் உரிமையாளர் கைது செய்யப்படலாம் என தகவல் உலாவுகிறது. இதற்கிடையே தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஏஆர் டெய்ரியின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த நிறுவனத்தின் நெய் தரமற்றதாக இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டதோடு, அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்த ஏஆர் டைரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில்," திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 10 லட்சம் கிலோ தரமான நெய்யை விநியோகம் செய்ய டெண்டர் விடப்பட்ட நிலையில் 319 ரூபாய்க்கு ஏஆர் டைரி நிறுவனம் டென்டரை எடுத்தது. தொடர்ந்து அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நான்கு டேங்கர் நெய் அனுப்பப்பட்டது. ஆனால் அப்போதைய ஜெகன்மோகன் அரசு அந்த நெய்யை பரிசோதிக்காமல் உபயோகித்தது. இதை அடுத்து அந்த நெய் தரமற்றதாக இருந்ததோடு மாட்டிறைச்சி கொழுப்பு கலப்படம் இருந்ததால் அது திருப்பி அனுப்பப்பட்டது.
மத்திய அரசு சோதனையில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது உறுதி ஆனதால் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து உணவு பொருள் கலப்படம், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஏஆர் டைரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது வழக்கறிஞர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications