சசிகலா காலில் எடப்பாடி விழுந்தது தப்பில்ல.. காலை வாரி விட்டது தான் தப்பு! பர்னிச்சரை உடைத்த உதயநிதி!
திண்டுக்கல்: எடப்பாடி பழனிசாமி பதவிக்காகப் போய் யார் காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது என்றார், இப்போது, ஆமாம் கால்ல விழுந்தேன், என்ன தப்பு? என சொல்கிறார்.. எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்தது தப்பு இல்லை, ஆனால் அதே காலை வாரி விட்டீங்களே அது தான் தப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திண்டுக்கல் வேட்பாளர் ஐ.பி .செந்தில்குமாருக்கு ஆதரவாக நாகல் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் தொகுதி பிரச்சாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது," 16 நாட்களாக 100 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றுள்ளேன். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக வாக்கு சேகரித்து வருகிறேன்.

ஐ பி செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று என்னை முதலமைச்சர் அனுப்பியுள்ளனர். நான் உங்களிடம் வாக்கு கேட்கலாம் என்று வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது ஏற்கனவே நீங்கள் அனைவரும் முடிவு எடுத்து வைத்துள்ளீர்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து வருவது போல் உள்ள போட்டோவை பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் காண்பித்தார்.
திண்டுக்கல் என்றாலே மகிழ்ச்சிதான் கெத்து தான். திண்டுக்கல் என்றாலே பூட்டு தான். இந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமை கூட்டத்திற்கும் சங்கீகள் கூட்டத்திற்கும் சரியான பூட்டை திண்டுக்கல்லில் போட்டு ஆக வேண்டும். நீங்கள் திண்டுக்கல்லில் சரியாக பூட்டை போட்டால் தமிழ்நாடே safeஅ இருக்கும். தமிழ்நாட்டை காப்பாற்றி விடலாம். திண்டுக்கல்லில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்று மக்களின் எழுச்சியை பார்க்கும் பொழுது தெரிகிறது.
திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம் என்ற உரிமையில் உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஐபி செந்தில்குமாரை எதிர்த்து போட்டி போடுவது சீனிவாசன் அவர்கள், அவர் ஒரு மாபெரும் சிந்தனையாளர், பெரிய சயின்டிஸ்ட். அவர் சொல்றதெல்லாமே அப்போ புரியாது, அப்புறமா வீட்டுக்குப் போய் யோசிச்சோம்னா புரியும். அந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு தத்துவங்களா சொல்லுவார். அவருக்கும் பக்கத்து மாவட்டத்துல இருக்கக்கூடிய இன்னொரு சயின்டிஸ்ட் ஒருத்தர் இருக்கிறார், விஞ்ஞானி அண்ணன் செல்லூர் ராஜு. அவங்க ரெண்டு பேருக்கும்தான் மிகப்பெரிய போட்டி.
இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன போட்டி? யார் அதிகமா தத்துவங்கள் சொல்றாங்க, யார் பெரிய சயின்டிஸ்ட்ங்கிறதுதான் இவங்க ரெண்டு பேருக்குள்ள போட்டியே. மத்திய பாஜக அரசு எம்பிக்கள் தொகுதியை மறுவரையறை (De-limitation) கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுல இப்போ 39 தொகுதிகள் உள்ளது. இந்தியா முழுக்க 543 எம்பிக்கள் இருக்காங்க. அதை அதிகப்படுத்துறாங்க, 815-ஆக்குறாங்க. மக்கள் கணக்கெடுப்பு எடுத்து அதைப் பொறுத்து அதிகப்படுத்துவதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா வரணும்? 39 ல் இருந்து 59 எம்பி அதிகரிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா தரேன்றாங்க? 47 எம்பிக்கள் தான் தருவோம்னு மத்திய பாஜக அரசு கூறுகிறது. திட்டம் போட்டு தமிழ்நாட்டை மீண்டும் பழிவாங்கிட்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தொகுதி வரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி என்ன சொல் கிறார் என்றால் 'De-limitation' ரொம்ப நல்ல விஷயம், இதனால யாருக்கும் பாதிப்பு வராதுன்னு சொல்கிறார்.
இந்த துரோகத்துக்கெல்லாம் சரியான பதிலை நாம வர்ற 23-ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு போய் வாக்குப் பெட்டியில் உதயசூரியன் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் பெற்று தர வேண்டும். முதலில் எடப்பாடி பழனிச்சாமி பதவிக்காகப் போய் யார் கால்லயும் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது. இப்போ என்ன சொல்கிறார் என்றால் ஆமாம் கால்ல விழுந்தேன், என்ன தப்பு?'ன்னு சொல்லிட்டாரு. எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தது தப்பு இல்லை. ஆனால் அதே காலை வாரி விட்டீங்களே அதைத்தான் நான் சொன்னேன். 10 தோல்வி பழனிசாமியை இந்தத் தேர்தலோட இன்னொரு தோல்வியைக் கொடுத்து மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்." என்றார்.














Click it and Unblock the Notifications