என்னை கேப்டன் மகன் என்று பார்க்காதீர்கள் - வாங்க பழகலாம்.. விஜய பிரபாகரன் கலகல பேச்சு
திண்டுக்கல்: கல்லூரியில் படிக்கும் போது மாமன், மச்சான் என கூப்பிட்டு கொள்வது போல் பழகலாம் வாங்க என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கி, 2006-ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை 3-ஆவது இடத்துக்கு தள்ளி எதிர்க்கட்சித் தலைவரானார்.
இத்தகைய சாதனைகளை புரிந்த விஜயகாந்த் தற்போது 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறாத நிலையிலும் மக்கள் பணிகளை செய்து வருகிறார். தற்போது விஜயகாந்துக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது மகன் விஜய பிரபாகரன் தந்தையின் பணியை எடுத்து செய்ய வந்துள்ளார்.

திண்டுக்கல்
தேமுதிகவை முன்னேற்றி காட்டுவேன் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார். இந்தநிலையில் அண்மையில் கஜா பாதித்த பகுதிகளான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வேடசந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் பிரேமலதா விஜயகாந்த்துடன், விஜய பிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 26-ஆம் தேதி சென்றிருந்தனர்.

விஜய பிரபாகரன்
அப்போது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது பிரேமலதாவுக்கும் விஜய பிரபாகரனுக்கும் மக்களும், தொண்டர்களும் வரவேற்பளித்தனர். கொடைக்கானலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய போது விஜய பிரபாகரனை கட்சியினர் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.

எழுச்சி நடை
ஆனால் அவர் பேசவில்லை. இதைத் தொடர்ந்து வேடசந்தூரிலும் நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது அந்த இடத்தில் மேடை அமைத்து மைக் செட் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போதும் விஜய பிரபாகரனை பேசுமாறு அழைத்தனர். அப்போது அவர் பேசுகையில் தேமுதிக அழிந்து விட்டது என்றார்கள். ஆனால் எழுச்சி நடை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கடமை
நீங்கள் கட்சியில் அதிகமாக தொண்டர்களையும் இளைஞர்களையும் சேர்க்க வேண்டும். என்னை கேப்டன் மகன் என்று நினைக்காதீர்கள். நண்பர்கள் போலவும் தோழர்கள் போலவும் கல்லூரியில் படிக்கும் போது மாமன் மச்சான் என கூப்பிடுவோம் இல்லையா அது போல் பேசி பழகி கொள்ளுங்கள். கூடிய விரைவில் கேப்டன் பழையபடி அதே கம்பீரத்துடன் வருவார். அவரை முதல்வர் ஆக்குவதுதான் நம் கடமை என்றார்.












Click it and Unblock the Notifications