ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் சசிகலாவுக்குத்தான் தெரியும்.. மீண்டும் புயலை கிளப்பும் நத்தம் விசுவநாதன்!
திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா தாய் அல்ல அவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது? என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும் என்றும் அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் அ.தி.மு.க கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவரிடம் யாரும் பேசக்கூடாது. அ.தி.மு.க வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி, நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:
கவுரவமான தோல்வி
சசிகலா அ.தி.மு.க.வின் உறுப்பினரே கிடையாது. அவரின் செயல்பாடு மிகவும் வேடிக்கையாக உள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர். கட்சியை அவர்கள் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர்.சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்வி கவுரமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான் இது.
சசிகலா துரோகம்
அருமையான தலைமையில் கட்சி சென்று கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சசிகலாவை ஜெயலலிதாவே நீக்கினார். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. அதற்கு காரணம் சசிகலா தான். ஜெயலலிதா நம்பிக்கையான உதவியாளர் என்று சசிகலாவை நம்பினார். ஆனால் சசிகலா அவருக்கு துரோகம்தான் செய்தார்.
அ.தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள்
ஜெயலலிதா மரணத்தில் என்ன மர்மம் நடந்தது? என்று சசிகலாவுக்கு மட்டும்தான் தெரியும். சசிகலாவின் உறவினர்கள் தான் கட்சி அதிகாரம் செலுத்தினார்கள். தற்போது கட்சி நல்ல வழியில் சென்று கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை தாய் என்று கூறிக் கொள்கிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை அவர் தாயல்ல ஒரு பேய். இந்த சலசலப்புக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சமாட்டார்கள்.
நீட் தேர்வு குறித்து..
திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் யாரும் சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில மாயையை ஏற்படுத்தி வருகின்றன. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக தொண்டர்கள் யாருக்கும் ஒருபோதும் விலை போகமாட்டார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும் திமுகவும் தான் என்பது அப்பட்டமான உண்மை. அதிமுக ஆரம்பத்திலிருந்து நீட் தேர்வு எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இவ்வாறு நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.