திண்டுக்கல் இந்துமதிக்கு இடியாக நடந்த சம்பவம்.. கணவனுக்கு எதிராக கலெக்டர் ஆபிஸையே அதிர வைத்த பெண்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம் அடைந்ததால் கணவருக்கெதிராக பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்துள்ளார்.
வரதட்சணை என்ற பெயரில் இன்றும் கொடுமைகள் நடந்து வருகிறது. படிக்காதவர்களை விட படித்தவர்களே இதுபோன்ற கொடுமைகளை அதிகமாக அரங்கேற்றி வருகிறார்கள். படித்த வசதியான, நல்ல வேலையில் உள்ள ஸ்மார்ட்டான மாப்பிள்ளை என்றால் கோடிகளை கொட்டி வாங்க வேண்டிய நிலை இன்னமும் இருக்கிறது. அதாவது பெண்ணுக்கு சொத்தின் மதிப்பில் ஒரு பாதி அல்ல, மொத்த சொத்தையும் கொட்டி கொடுக்க வேண்டிய நிலை பல இடங்களில் இருக்கிறது.

வரதட்சணை கேட்பது சட்ட விரோதம், அதற்கு தண்டனை கடுமையானது என்றாலும் இன்று வரை இந்த பிரச்சனை குறையவே இல்லை. குடும்ப பிரச்சனையில் சின்ன சின்ன சண்டைகளுக்கு எதிராக வரதட்சணை கொடுமை என்ற பெயரில் சிலர் புகார் அளிப்பதால் போலீசார் நன்கு விசாரத்த பின்னரே புகாரை பதிவு செய்யும் நிலை இருக்கிறது. ஏனெனில் புகார் கொடுத்த சில மணி நேரத்தில் புகார் வேண்டாம், சத்தம் போட்டு விடுங்கள் போதும் என்று அதிகம் பேர் சொல்வதே காரணமாக உள்ளது..
அதேநேரம் வரதட்சணை கொடுமையால் பெண்கள் அல்லது பெண்ணின் குடும்பத்தினர் உயிரிழந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் வேடசந்தூர் அருகே வரதட்சணை கொடுமையால் தந்தையை இழந்த பெண் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் இந்துமதி. இவருக்கும் திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி நாகப்பா நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குமரவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கணவர் குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. அதற்காக திருமணத்தின் போதே 50 பவுன் வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு மூன்று பவுன் நகையும், பெண்ணுக்கு 20 பவுன் நகையும், மூன்று லட்சமும் கொடுத்துத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
திருமணமான பிறகு கணவர் குமரவேல் சென்னையிலும், மனைவி இந்துமதி செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிலும் வசித்து வந்திருக்கிறார்.இந்நிலையில் மேலும் 20 பவுன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கொடுத்தால் தான் உன்னுடன் குடும்பம் நடத்த முடியும் இல்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக குமரவேல் கூறினாராம்.
இதனிடையே மாமியார் வீட்டில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இந்துமதி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.இந்துமதியின் தந்தை காளியப்பன் கணவர் குமரவேலின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது அவரை அவமானம் செய்து அனுப்பி உள்ளார்களாம். இதனையடுத்து மன வேதனை அடைந்த இந்துமதியின் தந்தை காளியப்பன் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனால் இந்துமதியின் தந்தை உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 7ஆம் தேதி உயிரிழந்தார். இந்துமதியின் தந்தை இறப்பதற்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை குற்றவியல் நீதிமன்ற நடுவர் வாக்குமூலம் பெற்றுள்ளார். அவர் என்ன வாக்குமூலம் கொடுத்தார் என்பது தெரியவில்லை.
இதனிடையே காளியப்பன் இறுதி சடங்குகள் நிறைவுற்ற நிலையில் இந்துமதியும் அவரது உறவினர்களும் நியாயம் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் கொடுத்துள்ளார்கள். இந்துமதி அளித்த புகாரில் கணவர் குமரவேல், மாமனார் நாகராஜன், மாமியார் மகாலட்சுமி, பெரிய மாமனார் சேதுராமன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்துமதி, "என் கணவர் குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் கூறி என்னை திருமணம் செய்தார்.. அதன் பின்னர், வரதட்சணை கேட்டு என்னைக் கொடுமைப்படுத்தினார். இது தொடர்பாக வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல் எரியோடு, தாடிக்கொம்பு ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் புகார் கொடுத்தேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே தான் நான் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications