வழக்கத்துக்கு மாறாக முன்னரே படையெடுத்த ஈசல்கள்... அப்புறம் என்ன களைகட்டியது ஈசமாவு சீசன்
திண்டுக்கல்: அடைமழை காலத்தில் படையெடுக்கும் ஈசல்கள் இந்த ஆண்டு ஆவணியே ஊர்வலம் கிளம்பிவிட்டது. இதனையடுத்து திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் ஈசல் மாவு தயாரிப்புதான் வீடுகளில் இப்போது ஸ்பெஷல் அயிட்டமாக தயாராகி வருகிறது.
பொதுவாக கிராமங்களில் புரட்டாசி மழையில் தான் ஈசல் பெருமளவு பறக்கும். இப்படி பறக்கும் ஈசல்களை சாக்கு சாக்காக பிடிப்பதற்காக கிராம மக்கள் திருவிழா கூட்டம் போல திரளுவார்கள்.

இப்படி பிடிக்கப்படும் ஈசல்களை வைத்து என்ன செய்வார்கள் என கேட்கிறீர்களா? ஈசல்கள் சொற்ப நேர வாழ்நாள் கொண்டவைதான்.
சாக்கு பைகளில் பிடிக்கப்படும் ஈசல்களை ஜஸ்ட் ஒரு உலுக்கு உலுக்கினால் இறக்கைகள் உதிர்ந்துவிடும். அப்புறம் ஈசல்களை நன்றாக காயவைத்து வறுத்து இடித்து அரிசி மாவு, கம்புமாவு, நாட்டு சர்க்கரை இப்படி எல்லாம் சேர்த்து சத்துமாவு போல சாப்பிடுவது திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் வழக்கம்.
இது உடல் ஆரோக்கியத்துக்கு வலிமை சேர்க்கக் கூடியது; புரத சத்து நிறைந்தது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. சில ஆண்டுகளாக மழையே எட்டிப்பார்க்காமல் போனதாலும் வளர்ந்துவிட்ட நாகரிக மோகத்தாலும் கிராமங்களில் ஈசல் மாவு கலாசாரம் காணாமலேயே போய்விட்ட சூழ்நிலைதான்.
இல்லையெனில் மழைகாலங்களில் கிராமங்களில் பொது உரல்களில் பெண்கள் கூடி ஈசமாவு இடிப்பதும் வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்து அனுப்புவதும் அது ஒரு கொண்டாட்ட காலம்தான். சரிங்க...
ஈசலில் நாய் ஈசல் என ஒருவகை இருக்கிறது. அது சாப்பிடுவதற்கு ஏற்றது இல்லையாம்.
நெல் ஈசல், கொழுந்து ஈசல், மாலைக் கண் ஈசல் இவை எல்லாம்தான் சாப்பிடக் கூடிய வகையறாக்களாம்.
இப்பவே எதுக்கு ஈசல் புராணம்?
திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் இந்த ஆவணியிலேயே ஈசல் அண்ணாச்சிகள் படையெடுத்துவிட்டனர்.. இதனால் ஏக குஷியில் கிராம மக்கள் ஈசமாவு தயாரிப்பில் இறங்கிவிட்டனர்.
அப்புறம் என்ன ஜே! ஜே! கொண்டாட்டம்தான்!












Click it and Unblock the Notifications