பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை
துபாய்: அமெரிக்காவின் 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அம்சத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பஹ்ரைனில் பொதுமக்கள் குடியிருப்புக்குள் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் ஏவிய ட்ரோன்தான் இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்காவின் சொதப்பலே இதற்கு காரணம் என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.
இதற்கு முன்னர் தெற்கு ஈரானில், பள்ளி ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. ஆனால், நாங்கள் தாக்குதல் நடத்தவே இல்லை என்று சாதித்தது. இருப்பினும் ஆதாரங்கள் வெளியே வந்த நிலையில், அமெரிக்கா தவறை ஒப்புக்கொண்டது. தற்போதும் இதுதான் நடந்திருக்கிறது.

என்ன நடந்தது?
கடந்த 9ம் தேதி பஹ்ரைனின் குடியிருப்பு பகுதி ஒன்றில், ஏவுகணை பாய்ந்தது. இது வெடித்து சிதறியதில் குழந்தைகள் உட்பட 32 பேர் காயமடைந்தனர். வழக்கம்போல, இந்த சம்பவத்தை ஈரான் தலையில்தான் அமெரிக்கா கட்டியது. ஈரான் அனுப்பிய ட்ரோன்தான் மக்களை குறி வைத்து தாக்கியதாக சொன்னது. ஆனால், சம்பவம் தொடர்பான ஆதாரங்களை ராய்டர்ஸ் செய்தி ஊடகம் மற்றும் ஆய்வாளர்கள் வெளியிட்டனர். இதில், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அம்சம்தான் இந்த வெடிப்புக்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.
எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
வழக்கமாக ட்ரோன் தாக்குதல் அல்லது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனில், அந்த இடத்தில் ட்ரோன், ஏவுகணையின் பாகங்கள் இருக்கும். அதை வைத்து யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். அதுபோலத்தான் பஹ்ரைனில் ஏவுகணை வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அம்சமான 'பேட்ரியாட்' ஏவுகணையின் பாகங்கள் மீட்கப்பட்டன.
பெரிய ஓட்டை
எதிரி நாட்டின் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழிப்பதுதான் 'பேட்ரியாட்' வேலை. இருப்பினும் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தன்னிச்சையாக ஏவுகணைகளை இது ஏவும். உதாரணமாக மேக கூட்டங்கள், பறவை கூட்டங்கள் இதையெல்லாம் பார்த்து, ஏவுகணைகள், ட்ரோன்கள் என்று புரிந்துக்கொண்டு தாக்குதலை தொடங்கிவிடும். ஆனால், இலக்கை தாக்க முடியவில்லை எனில், தன்னிச்சையாக வெடித்து சிதறிவிடும்.
இப்படித்தான் பஹ்ரைனில் நடந்திருக்கிறது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆக 32 பேர் காயமடைந்ததற்கு காரணம் ஈரான் கிடையாது, அமெரிக்காதான்.
அமெரிக்காவின் தவறுகள்
இதற்கு முன்னர், தெற்கு ஈரானில் மினாப் பகுதியில் பெண்கள் பள்ளி மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. இதை கேள்வி எழுப்பியபோது, அதெல்லாம் நாங்க செய்யல.. ஈரான்தான் சர்வதேச அனுதாபத்தை தேட, அவங்க பள்ளி மீதே தாக்குதல் நடத்தியிருக்கு என்று அமெரிக்கா சமாளித்தது. ஆனால், தாக்குதல் நடத்தியது அமெரிக்காதான் என்பது குறித்து ஆதாரங்கள் வெளியான பின்னர், தெரியாமல் நடத்திவிட்டோம் என்று சொன்னது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் முன்னர் ராணுவ தளம் இருந்தது. அந்த பழைய டேட்டாவின் அடிப்படையில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்கா விளக்கம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications