"தாயின் கனிவோடு.. திமுக அரசு அயலக தமிழர்களை பாதுகாக்கும்!" துபாயில் முதல்வர் ஸ்டாலின் அசத்தல் பேச்சு
துபாய்: வெளிநாட்டுப் பயணங்களை ஈர்க்க ஐக்கிய அமீரகம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அதன் ஒரு பகுதியாக அங்குள்ள அயலக தமிழர்களிடையே உரையாடினார்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 4 நாட்கள் அரசு முறை பயணமாகத் துபாய் சென்றுள்ளார்.
துபாயில் கடந்த அக்டோபர் மாதம் முதல் உலக எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது.

உலக எக்ஸ்போ கண்காட்சி
இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் திறந்து வைத்தார். தமிழ்நாட்டிற்கான அனைத்து சிறப்புகளையும் இந்த ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 192 நாடுகளில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
இது மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அமீரகத்தின் முக்கிய அமைச்சர்கள் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழல் குறித்தும் விவரித்தார். மேலும், ஐக்கிய அமீரக அமைச்சர்களையும் முதலீட்டுக் குழுவையும் தமிழ்நாட்டிற்கு வருமாறும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

தமிழர் பெருமை
மேலும், நேற்றைய தினம் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கீழடியின் காணொலி ஒளிபரப்பப்பட்டது. தொல் தமிழர் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த காணொலி அமைந்திருந்தது. இதனை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதேபோல இன்றைய தினமும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்
ஐக்கிய அமீரக பயணத்தின் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள அயலக தமிழர்களிடையே உரையாடினார். "நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர்களிடையே உரையாடினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசை அயலக தமிழர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். மேலும், தாயின் கனிவோடு திமுக அரசு அயலக தமிழர்களைப் பாதுகாக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழ் மொழி
துபாய் வாழ் தமிழர்களுக்கு இடையே பேசிய முதல்வர் ஸ்டாலின், "நம்மை நாடுகள் பிரிக்கலாம் என்றாலும் தமிழ் மொழி நம்மை இணைக்கிறது" என்று பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சை அயலக தமிழர்கள் உற்சாகத்துடன் கேட்டு ரசித்தனர். முன்னதாக இன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு 2,600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications