அதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்
துபாய்:சர்வதேச அளவில் அதிகளவு வெளிநாட்டு பயணிகளை கொண்டு இயங்கும், மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை துபாய் சர்வதேச விமான நிலையம் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
அது தொடர்பான அறிவிப்பை துபாய் விமான நிலைய அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் துபாய் விமான நிலையத்துக்கு 89 மில்லியன் மக்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 88. 2 மில்லியனாக இருந்துள்ளது. 2014ம் ஆண்டில் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை கொண்ட லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி, துபாய் சர்வதேச விமான நிலையம் அந்த பெருமையை பெற்றது.
சர்வதேச அளவில் பரபரப்பான துபாய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 75 விமான நிலையங்களுக்கு துபாயில் இருந்து விமானங்கள் சென்று வருகின்றன. சர்வதேச அளவில் வெளிநாட்டு பயணிகளை அதிகளவு கொண்ட, மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரை தொடர்ந்து 5வது ஆண்டாக துபாய் சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது.
ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் தான்... ஒட்டு மொத்தமாக அனைத்து வகைகளிலும் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.