விராட் கோலி அடி மடியிலேயே கை வைக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர்..நமீபியா போட்டியில் எதிர்பார்க்கும் சேஞ்ச்
துபாய்: இந்தியா மற்றும் நமீபியா அணிகள் இடையே 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக பணியாற்றக் கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து இந்தியா தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது விராட்கோலி தலைமையிலான இந்திய அணி.
நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு போகும் வாய்ப்பு இருந்தது.

நியூசிலாந்து வெற்றி
நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அந்த வாய்ப்பு உறுதியாகவும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று விட்டதால் இனிமேல் இந்த உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழி கிடையாது இந்தியாவுக்கு.

சஞ்சய் மஞ்சரேக்கர்
இன்றைய போட்டியில் நமீபியாவுடன் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்ற நிலையில்தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இதோ அவர் கூறியது- ஐசிசி உலக கோப்பை 20 ஓவர் தொடருக்கு பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள இருப்பதாக விராட்கோலி தெரிவித்திருந்தார். எனவே, நமீபியாவிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பை விராட் கோலி கொடுத்துவிட்டு பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

யார் கேப்டன்
ரோஹித் சர்மாவுக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்காமல் அவரை கேப்டனாக ஆட வைக்கலாம். கோலி இப்படி செய்தால், இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக மாறும். இவ்வாறு சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று பேச்சுகள் நடைபெறும் நிலையில் ரோகித் சர்மா கேப்டனாவதை உறுதி செய்வதற்கு விராட் கோலி இப்படி ஒரு அதிரடி முடிவை எடுக்கலாம் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

புது வீரர்கள்
ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார் சஞ்சய் மஞ்சரேக்கர் என்பதுதான் அவரது இந்த பேட்டியின் சாராம்சமாக உள்ளது. இதனிடையே நமீபியாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும். இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

குழப்பம்
அதோடு சேர்த்து மஞ்சரேக்கர் ஐடியாவின் படி திடீரென்று கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிற்கு, விராட் கோலி கொடுப்பாரா அணி நிர்வாகம் மூலமாக முறைப்படி கேப்டன் பொறுப்பு மாறிச் செல்ல வேண்டும் என்று விராட் கோலி விரும்புவாரா என்பது தெரியவில்லை. அவசரப்பட்டு ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை விராட் கோலி கொடுத்தால் அது வீண் குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications