ஈரானுடன் மோத தயாரான அமீரகம்? நாட்டு மக்களுக்கு திடீரென போட்ட உத்தரவு.. அமெரிக்காவுடன் கைகோர்ப்பு?
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் ஈரான், ஈராக் மற்றும் லெபனான் நாடுகளுக்கு பயணம் செய்ய திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கிருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்காவுடன் கைகோர்க்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நின்றாலும் கூட மோதல் தொடர்ந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. இது டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.
எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் உள்ளது. ஏற்கனவே ஈரானை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்து வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் இருந்து ரகசியமாக இஸ்ரேலுக்கு 6,500 டன் எடை கொண்ட ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஈரானை மீண்டும் தாக்கும் அமெரிக்கா?
ஈரான் மீது எப்போதும் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை கடந்த ஆண்டு முதல் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இப்படியான சூழலில் அமெரிக்கா திடீரென்று ராணுவ தளவாடங்களை இஸ்ரேலில் குவித்து இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவிலேயே மீண்டும் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அமீரகம் போட்ட திடீர் உத்தரவு
இதற்கிடையே தான் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டு மக்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டை சேர்ந்தவர்கள் ஈரான், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் இந்த 3 நாடுகளில் உள்ள ஐக்கிய அரபு அமீரக மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது.
விவாதம் கிளப்பிய உத்தரவு
ஈரானுடன் நேரடியாக அமீரகத்துக்கு மோதல் உள்ளது. அதேபோல் ஈராக், லெபனானில் ஈரான் ஆதரவு ஆயுதப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான் திடீரென்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில் இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரானை தாக்கியது.
இதற்கு பதிலடியாக ஈரான், ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கியது. அப்போது மவுனமாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம் திடீரென்று தற்போது தனது நாட்டு மக்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விவாதத்தை கிளப்பி உள்ளது. இதன் பின்னணியில் வேறு பெரிய விஷயம் இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
உத்தரவின் பின்னணி
மேலும் ஏற்கனவே ஈரானுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பகை உள்ளது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு தான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியது. இது ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஓபெக் அமைப்பில் ஈரான், சவுதி உள்பட பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. தற்போது அந்த கூட்டமைப்பை விட்டு அமீரகம் வெளியேறி இருப்பது அந்த நாடுகளை யோசிக்க வைத்துள்ளது. மத்திய கிழக்கில் தன்னை சுற்றி உள்ள சவுதி, கத்தார், ஓமன், குவைத், ஈரானை விட்டுவிட்டு ஐக்கி அரபு அமீரகம் தனித்து செயல்பட விரும்புகிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவுடன் கைகோர்ப்பா?
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த செயலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார். இருநாடுகள் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடிவை வரவேற்றார். இதனால் ஈரானுக்கு எதிராக அதிகரித்து வரும் மோதலில் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்காவுடன் கைகோர்க்கலாம் என்ற யூகங்கள் உள்ளன.
இதனால் தான் ஈரான், ஈராக், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமீரகத்தை சேர்ந்தவர்கள் செல்ல வேண்டாம். அங்கிருப்பவர்கள் உடனடியாக திரும்ப வர வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications