830மீ உயர புர்ஜ் கலீபா உச்சியில்.. ஒற்றை ஆளாய் ஏறி நின்ற பெண்.. வைரலாகும் வீடியோ.. செம காரணம்!
துபாய்: உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உச்சத்தில் பெண் ஒருவர் ஏறி நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்டது எப்படி என்ற விவரமும் வெளியாகி உள்ளது.
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் துபாயில் இருக்கும் புர்ஜ் கலீபா. இதன் உச்சியில் இருக்கும் கூம்பையும் சேர்த்து இதன் மொத்த உயரம் 830 மீட்டர் ஆகும். 2009ல் இருந்து உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையை இந்த கட்டிடம்தான் கொண்டு இருக்கிறது.
மனித குலத்தின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், கட்டிட உலகின் வளர்ச்சிக்கு சான்றாகவும் இந்த உயர கட்டிடம் எழுந்து நிற்கிறது. கான்கிரீட், அலுமினியம், ஸ்டீல் ஆகியவை கொண்டு வெறும் 5 வருடங்களில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கொரோனா.. உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 4,325,692 ஆக உயர்வு.. அமெரிக்காவில் மீண்டும் 1 லட்சம் கேஸ்கள்
பெண்
இந்த பிரம்மாண்ட புர்ஜ் கலீபா கட்டிடத்தில்தான் நிக்கோல் ஸ்மித் லூட்விக் என்ற பெண் ஏறி நின்று இருக்கிறார். ஆம் இதன் உச்சியில் தனியாக இவர் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாகசம் நிகழ்த்துவதற்காகவோ, செய்தியில் வர வேண்டும் என்பதற்காகவோ இவர் இந்த செயலை செய்யவில்லை. புர்ஜ் கலீபா மீது கெத்தாக, ஸ்டைலாக இந்த பெண் நிற்க உண்மையான காரணமே வேறு.. யுனைட்டட் அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன் விமான விளம்பரத்திற்காக இவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
ஏன்
ஆம் எமிரேட்ஸ் ஏர்லைன் விமான நிறுவனத்தின் புதிய விளம்பர யுக்தியாகும் இது. உயரே பறக்கலாம் என்பதை குறிக்கும் விதமாக இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கையில் விளம்பர பதாகைகளுடன் "நாங்கள் உயரே பறக்கிறோம்" என்ற மெசேஜை அந்த பெண் சொல்லும் விதத்தில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யுனைட்டட் கிங்டம் ஐக்கிய அரபு அமீரகம் மீதான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
ரெட் லிஸ்ட்
கொரோனா பரவல் காரணமாக யுகேவின் ரெட் லிஸ்டில் இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தை தளர்வுகள் கொண்ட ஆம்பர் லிஸ்டுக்கு யுகே கொண்டு சென்றது. இதனால் இனி வேக்சின் போட்டவர்கள் யாரும் அமீரகத்தில் இருந்து யுகே சென்றால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் அமீரகம் யுகே இடையிலான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். விமான பயணிகள், விமான போக்குவரத்தும் இதனால் அதிகரிக்கும்.
நன்றி
யுகேவின் இந்த முடிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் எமிரேட்ஸ் ஏர்லைன் நிறுவனம் இந்த விளம்பரத்தை தயாரித்துள்ளது. யுகேவின் இந்த தளர்வு அறிவிப்பு எங்களை உயரத்தில் பறக்க வைத்துள்ளது என்று எமிரேட்ஸ் நிறுவனம் இந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. நிக்கோல் ஸ்மித் லூட்விக் கையில் பதாகைகளுடன் இதற்காக புர்ஜ் கலீபா உயரத்தில் நிற்க வைக்கப்பட்டார்.
இவர் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஆவார். உயரம் என்றால் கொஞ்சமும் அச்சப்படாத அளவிற்கு பல முறை, பல நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து குதித்து சாகசங்களை இவர் செய்து இருக்கிறார்.
தேர்வு
முறையாக பயிற்சி எடுத்து தற்போது ஸ்கை டைவிங் பயிற்சியாளராக இருக்கும் இவரை பல கட்ட சோதனைகளுக்கு பின் இந்த விளம்பரத்திற்காக தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். மிகுந்த பாதுகாப்போடு, முறையான ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த வீடியோவை தயாரித்து உள்ளனர். இந்த வீடியோ விளம்பரத்திற்கு பின் இணைய உலகில் புதிய பிரபலமாக நிக்கோல் ஸ்மித் லூட்விக் உருவெடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரின் பின்தொடர்பாளர்கள் நொடிக்கு நொடி உயர்ந்து வருகிறார்கள்.ஏர்லைன்ஸ் ஒன்றின் இந்த புதிய விளம்பர யுக்தி சர்வதேச அளவில் ஹிட் அடித்துள்ளது.