ஹார்முஸ் ஜலசந்தி தொல்லை இனி இல்லை.. OPEC-க்கில் வெளியேறிய UAE-யால் இந்தியாவுக்கு ஜாக்பாட்! எப்படி?
துபாய்: OPEC அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீரென்று வெளியேறி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் பிரச்சனை நிலவுவதற்கு மத்தியில் இந்த முடிவை ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவால் இந்தியாவுக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஃபுஜைரா பைப்லைன் வழியாக இந்தியாவுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெயை ஐக்கிய அரபு அமீரகத்தால் இனி வழங்க முடியும் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூட தற்போது அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வரத்து சரிந்துள்ளது. இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் OPEC அமைப்பில் இருந்து நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறி உள்ளது. OPEC என்பதன் ஆங்கில விரிவாக்கம் Organization of the Petroleum Exporting Countries என்பதாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் "பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு" என்று சொல்லலாம்.
OPEC பின்னணி
இந்த அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் சேர்த்து மொத்தம் 13 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. அல்ஜிரியா, காங்கோ, இக்வடோரியல், கயானா, காபன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறி உள்ளதால் 12 நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் உள்ளன.
இந்த OPEC அமைப்பில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்பது பெட்ரோலியக் கொள்கைகளை ஒருங்கிணைத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை உருவாக்குவதாகும். அதன்படி விலை நிர்ணயம், கச்சா எண்ணெய் உற்பத்தி, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தொடர்ந்து வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதாகும். இந்த அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கும்போது ஒரு நாட்டால் அதிகப்படியாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியாது.
ஐக்கிய அமீரகம் வெளியேறியது ஏன்?
ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து ஒரு நாளைக்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 மில்லியன் பேரல் வரை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்தது. இதனை 2027 ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் 'ஓபெக்' அமைப்பு அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தால் உற்பத்தியை கூட்ட முடியவில்லை. அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் தனது திறனில் 30 சதவீதம் வரை குறைவாகவே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வந்தது. இதனால் தான் தற்போது அந்த நாடு 'ஓபெக்' அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக இந்த அமைப்பில் செயல்பட்டு வந்த ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வெளியேறி உள்ளது. இதனால் இனி 'ஓபெக்' கூறுவது போல் ஐக்கிய அரபு அமீரகம் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை கடைப்பிடிக்க வேண்டியது இல்லை. கூடுதலாக உற்பத்தி செயயலாம். புரியும்படி கூற வேண்டும் என்றால் ஐக்கிய அரபு அமீரகம் சுதந்திரமாக தனது முழு உற்பத்தி திறனை வெளிக்காட்டலாம். கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு நாளைக்கான கச்சா எண்ணெய் உற்பத்தி 3.4 மில்லியன் பேரல் என்ற அளவில் குறைக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி திறன் 4.8-5 மில்லியன் பேரல் வரை இருந்தாலும் கூட 'ஓபெக்' அமைப்பில் இருந்ததால் கூடுதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு ஜாக்பாட் ஏன்?
தற்போது 'ஓபெக்' அமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் முழுமையாக கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் நம் நாட்டுக்கு பலன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் ஐக்கிய அரபு அமீரகம் 9 முதல் 10 சதவீதம் வரை பூர்த்தி செய்கிறது. அதோடு எல்என்ஜி சப்ளையில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்றி வருகிறது. இனி ஐக்கிய அமீரகம் கூடுதலாக கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து நம் நாட்டுக்கு வழங்க முடியும்.
ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து..
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வருகிறது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனையால் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் குழாய் வழியாக நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபதாபியின் ஹப்ஷான் எண்ணெய் வயல்களில் இருந்து ஃபுஜைரா துறைமுகம் வரை 406 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய் வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை தவிர்ப்பதற்காகவே 2012ம் ஆண்டில் சுமார் 4 பில்லியன் டாலரில் செல்வில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 48 அங்குலம் கொண்ட குழாய்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு ஹப்ஷான் எண்ணெய் வயல்களில் இருந்து ஃபுஜைரா துறைமுகம் வரை பூமிக்கடியில் கச்சா எண்ணெய் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஃபுஜைரா துறைமுகம் என்பது அரபிக்கடலையொட்டி உள்ளது. இங்கிருந்து கப்பல்களில் கச்சா எண்ணெயை கப்பல்களில் ஏற்றி வர்த்தகம் செய்ய முடியும். இதன்மூலம் ஹார்முஸ் ஜலசந்திக்கு இந்திய கப்பல்கள் செல்ல வேண்டியது இல்லை. அதற்கு முன்பாகவே ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெயை கப்பல்களில் நிரப்பி இந்தியா கொண்டு வர முடியும். இப்போது நம் நாடு இந்த குழாய் வழியாக கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. 'ஒபெக்'கில் இருந்து வெளியேறிய ஐக்கிய அரபு அமீரகத்தால் இனி ஃபுஜைரா குழாய் வழியாக இந்தியாவுக்குக் கூடுதலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும்.
தினமும் 1.5 மில்லியன் பேரல்
இந்த குழாய் வழியாக ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் பேரல் (1.8 மில்லியன் வரை அதிகரிக்கலாம்) கச்சா எண்ணெய் சப்ளையை செய்ய முடியும். இங்கிருந்து கச்சா எண்ணெயை எடுத்து கொண்டு கப்பல்கள் நேரடியாக அரபிக்கடலில் பயணிக்க முடியும். இந்த வழித்தடத்தில் ஏற்கனவே நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
ற்போது 'ஓபெக்' அமைப்பில் இருந்து ஐக்கிய அருபு அமீரகம் வெளியேறி உள்ளதால் நம் நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு அந்த நாடு கூடுதலாக கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து ஃபுஜைரா துறைமுகம் வழியாக நம் நாட்டுக்கு வழங்கலாம். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முயற்சி என்பது நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்கலாம்.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை 200 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால் 'ஓபெக்' வெளியேற்றம் மற்றும் ஃபுஜைரா கச்சா எண்ணெய் குழாய் திட்டம் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலம் இந்தியா பெரிய பலனை அடையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications