துபாயிலிருந்து தமிழகத்திற்கு நேசக்கரம்... 330 ஆக்சிஜன் உருளைகள் வழங்கிய அமீரகத் தொழிலதிபர்..!
துபாய்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமீரகத் தொழிலதிபர் சாகுல் அமீது என்பவர் தமிழக அரசுக்கு 330 ஆக்சிஜன் உருளைகளை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும் சுகாதாரத்துறை பம்பரமாக சுழன்று வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதலே ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், என கடந்த ஒரு மாதமாக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக தொழிலதிபர்கள் 10 லட்ச ரூபாயில் தொடங்கி 10 கோடி ரூபாய் வரை அவரவர் நிறுவனத்தின் சக்திகேற்ப நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், நோபல் மெரைன் நிறுவனத்தின் தலைவருமான அமீரகத் தொழிலதிபர் சாகுல் ஹமீது என்பவர் ரூ.50 லட்சம் மதிப்பிலான 330 ஆக்சிஜன் உருளைகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது முறையாக தமிழக அரசை வந்தடைந்துவிட்ட நிலையில் அதற்கான அத்தாட்சி கடித்தத்தை அரசிடமிருந்து பெற்ற வழக்கறிஞர் இம்ரான் கான், அதனை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் காட்டி விவரத்தை எடித்துக் கூறியிருக்கிறார். இதையடுத்து பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் உருளைகள் வழங்கி உதவியதற்காக உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications