புர்ஜ் கலிபா தலைநிமிர்ந்த நிற்க காரணமே இந்திய நிறுவனம்தான்.. அது தெரியுமா உங்களுக்கு! சுவாரசிய தகவல்
துபாய்: உலகின் மிகப் பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா துபாயில் கம்பீரமாக நிற்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், 2010ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் நிலைத்து நிற்கவும் சிக்கலின்றிச் செயல்படவும் இந்திய நிறுவனங்கள் தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா, ஆடம்பரத்தின் அடையாளமாக அறியப்படுகிறது. சுமார் 828 மீட்டர் உயரத்தில் நிற்கும் இது, 100 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் கூட தெளிவாகத் தெரியுமாம். இந்த கட்டிடத்தைத் தங்கள் நவீனத்துவத்தின் சாதனையாக துபாய் காட்டுகிறது. மேலும், செல்வத்தின் அறிகுறியாகக் கருதுகிறது

புர்ஜ் கலிஃபா
இந்த புர்ஜ் கலிஃபா கட்டிடம் உலகளவில் பலரையும் ஈர்க்கிறது. இருப்பினும், இந்த புர்ஜ் கலிஃபாவை கட்டிடம் குறித்த சுவாரசியத் தகவல்கள் பலருக்கும் தெரியாது. குறிப்பாக அதில் இருக்கும் இந்தியப் பங்களிப்பு குறித்து பலருக்குத் தெரிவதில்லை. இந்த வானுயரக் கோபுரம் எந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது? அதன் வலிமைக்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? குறித்து எல்லாம் நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கட்டியது யார்
புர்ஜ் கலிஃபாவை கட்டமைத்தது தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் சி&டி (Samsung C&T) நிறுவனமாகும். சாம்சங் என்றாலே பலருக்கும் ஸ்மார்ட்போன்கள், டிவி உள்ளிட்ட சாதனங்களே நினைவுக்கு வரும். ஆனால், அதன் கட்டுமான பிரிவான சாம்சங் சி&டி கூட சர்வதேச அளவில் பிரபலமானது. இதன் காரணமாகவே அவர்களால் புர்ஜ் கலிபா கட்டிடத்தை வெற்றிகரமாகக் கட்டி முடிக்க முடிந்தது.
உலகின் மிக உயரமான மற்றும் புகழ்பெற்ற கட்டடங்களைக் கட்டுவதில் சாம்சங் சி&டி நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. புர்ஜ் கலிஃபா மட்டுமன்றி, கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ், மெர்டெகா 118, தைவான் நாட்டின் தைபே 101, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ததாவூல் டவர் போன்ற பல முக்கியமான கட்டிடங்களை இந்த சாம்சங் சி&டி உருவாக்கியுள்ளது.
இந்திய நிறுவனம்
புர்ஜ் கலிஃபாவின் வலிமைக்குப் பிரதானக் காரணமே அதன் கட்டுமானத்தில் உள்ள உயர்தர ஸ்டீல் மற்றும் கான்கிரீட் தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வானளாவிய கட்டடத்திற்குத் தேவையான ஸ்டீலின் பெரும் பகுதி, இந்தியாவின் டாடா குழுமத்தால் வழங்கப்பட்டதாகும். இந்தக் கட்டுமானத்திற்குத் தேவையான ஸ்டீலில் சுமார் 39,000 டன்னை டாடா ஸ்டீல் நிறுவனமே கொடுத்துள்ளது. அதாவது புர்ஜ் கலிபா கட்டடத்தின் உள்ளே சுமார் 400 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு தளத்தைக் கட்ட டாடா வழங்கிய ஸ்டீல் பயன்பட்டுள்ளது.
செயல்படக் காரணம்
அதேபோல இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்க 330,000 கன மீட்டர் கான்கிரீட்டும் பயன்படுத்தப்பட்டது. இது சுமார் ஒரு லட்சம் யானைகளின் எடைக்குச் சமமாகும். இது மட்டுமின்றி கட்டடத்தின் குளிர்விக்கும் அமைப்பும் ஒரு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
அரேபியப் பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படும் குளிரூட்டும் அமைப்பைக் கொடுத்துள்ளதும் டாடாவின் வோல்டாஸ் நிறுவனம் தான். இதன் காரணமாகவே வெளியே வெப்பம் உச்சமாக இருந்தாலும், உள்ளே இதமான சூழல் நிலவுகிறது. வோல்டாஸ் நிறுவனம் புர்ஜ் கலீஃபாவில் 13,000 டன் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய குளிரூட்டும் அமைப்பை நிறுவியது. இதனால் பாலைவனத்தின் உச்சக்கட்ட வெப்பம் இருந்தாலும் கட்டிடத்தில் வெப்பம் குறைவாகவே இருக்கிறது.
பல திட்டங்கள்
வோல்டாஸ் நிறுவனம் இதுபோன்ற பிரம்மாண்டத் திட்டங்களில் ஈடுபடுவது இது முதல்முறை இல்லை. ஆர்.எம்.எஸ். குயின் மேரி 2 சொகுசுக் கப்பல், ஓமான் சுல்தான் அரண்மனை, பஹ்ரைன் சிட்டி சென்டர் மால், அபுதாபியின் ஃபெராரி வேர்ல்ட் மற்றும் கத்தாரின் சித்ரா மருத்துவ மற்றும் ஆய்வு மையம் எனப் பல முக்கிய கட்டிடங்களுக்கும் வோல்டாஸ் தான் குளிரூட்டும் வசதி செய்து கொடுத்துள்ளது. இப்படி உலகின் மிகப் பெரிய கட்டிடம் இன்று நிலைத்து நிற்கவும் அது சிக்கலின்றிச் செயல்படவும் இந்திய நிறுவனமே காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications