நெஞ்சில் மிதித்தார் ஓபிஎஸ்.. இன்னும் 46 அமாவாசை கூட நீடிக்காது.. பன்னீர், ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!
திண்டுக்கல் : முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணை கொண்டு வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் எடப்பாடி பழனிசாமி.
உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓபிஎஸ் பக்கம் பாயும் பொதுக்குழு உறுப்பினர்கள்.. அப்போ ஈபிஎஸ் ஆதரவு.. இன்று தேனியில் - என்ன நடக்குது?
பழனியில் இறங்கிய பழனிசாமி
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பழனிக்குச் சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி.
தொண்டர்களின் நெஞ்சில் உதைத்தார்
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுகவுடன் இணைந்து அதிமுகவின் இரு பெரும் தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவினர் கோவிலாக கருதும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், ஜெயலலிதா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் சேதப்படுத்தினர். அதிமுக அலுவலகத்தை எட்டி உதைத்தது ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம்.
இன்னும் 46 அமாவாசைகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களால் அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களையும், பொருட்களையும் மீட்டுத் தர முடியாத அரசு திமுக அரசு. பலம் பொருந்திய அதிமுகவிற்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? திமுக அரசு எப்போது ஆட்சியை விட்டுப் போகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டன. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்.
எத்தனை அவதாரம் எடுத்தாலும்
மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் இந்த அரசுக்கு கவலை இல்லை. ஸ்டாலினின் அரசு குழு அரசு. இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றால் ஒரு பயனும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை பிளவுபடுத்தி வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணை கொண்டு வீழ்த்துவோம். இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நடைபெறக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.
Recommended Video
ஸ்டாலின் கொடுத்த அற்புதமான பரிசு
முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஸ்டாலின் மக்களை மறந்தால் மக்கள் ஸ்டாலினை மறப்பது உறுதி. மக்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால் விலை என அனைத்தையும் உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்" எனக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.