தலையங்கம்: 'போராளிகளின்' தேசம் கியூபாவிடம் சரணடைந்த 'ஏகாதிபத்திய' அமெரிக்கா!
உலகின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயர் பெற்ற கியூபா தேசத்துக்கு மக்களுக்கு 'புதிய சர்க்கரை' செய்தி இப்போது கிடைத்திருக்கிறது..
"50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கியூபா தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை தோல்வி அடைந்துவிட்டது... இந்த காலாவதியான அணுகுமுறையை முடிவுக்கு கொண்டு வருவோம். இரு தேசங்களிடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பிறந்தேன்..... பனிப்போர் காலத்தில் நாம் வியட்நாமுக்காக யுத்தம் நடத்தினோம்.. அதே வியட்நாமுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தினோம்.. அதே பாதையில்தான்..."
என்று நீளும் இந்த "சரணாகதி" உரைதான் கம்யூனிச கியூபா தேசத்தினருக்கான சர்க்கரை செய்தி.. இந்த உரையை நிகழ்த்தியது.....தங்களை பரம எதிரியாக கருதி முழுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து- தங்களது தேசத்தின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொலை செய்ய முயன்ற அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய பேரரசின் அதிபர் ஒபாமா என்கிற போது உண்மையிலேயே இது கியூபா குடிமக்களுக்கு மட்டுமல்ல.. உலகத்துக்கே இன்ப அதிர்ச்சிதான்...
இங்கே வென்றிருப்பது 'நிஜமான' மக்களின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவும் வீரகாவியமான சே உள்ளிட்ட அவரது சகாக்களும். இன்றும் அவருக்கு உற்ற உறுதுணையாக இருக்கும் கியூபா மக்களும்தான்..
பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவை வீழ்த்த - அடிமைப்படுத்த - பிளவுபடுத்த - நசுக்க ..என எத்தனை எத்தனை முயற்சிகள்... பிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டில் கூட அமெரிக்காவின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ. விஷம் தடவிய கதைகள்தான் எத்தனை எத்தனை..
எல்லாமும் "தோல்வியடைந்துவிட்டன" என்று "சரணடைந்துவிட்டதாக"வே பிரகடனம் செய்திருக்கிறார் உலகின் பெரியண்ணன் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா! வெளிப்படையான இந்த நேர்மைக்கு சல்யூட் மிஸ்டர் ஒபாமா!
நீங்கள் எத்தனை பொருளாதாரத் தடைகளை விதித்து எங்களை தனிமைப்படுத்தினாலும் எங்கள் தலைவர் பிடலின் வழிதான் நடப்போம் என்று 1959ஆம் ஆண்டு முதல் இன்றளவும் மிக மிக உறுதியாக நின்று மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் உலகமே வியக்கும் வகையில் முன்னேறிக் காட்டியிருக்கும் கியூபா தேசத்தின் பெருங்குடிமக்களே.. நீங்களே ஒடுக்கப்படுகிற.. போராடுகிற உரிமைக்காக போராடி அழிந்தே போகிற அத்தனை கோடி மக்களுக்கும் முன்னுதாரண புருஷர்கள்!
ஆயுதம் இல்லை.. அணு ஆயுதம் இல்லை.. யுத்தம் இல்லை.. முதலாவது, இரண்டாவது உலகைப் போர் போல இங்கே நிகழ்ந்தது 3வது உலக மகா யுத்தமும் அல்ல.. :"கத்தியின்றி ரத்தமின்றி" கியூபாவுடன் கை குலுக்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா எனில் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தில் பிறந்த ஒடுக்கிய அதே தேசத்தின் உச்சாணிப் பதவியில் அமர்ந்திருக்கும் ஒபாமாவால்தான் சாத்தியமும் கூட!
பிடல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய 2 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர் ஒபாமா என்றாலும் இருவரும் "ஒடுக்குமுறையின்" வலியை அனுபவித்தவர்கள் அல்லவா...அதனால்தான் இந்த சரித்திரம் சாத்தியமாகி இருக்கிறது!
இந்த சரித்திரம் ஓரிரவில் நடந்துவில்லைதான்.. ஓராண்டாய் எத்தனையோ சுற்றுப் பேச்சுகளுக்கு பின்னர்தான் நிகழ்ந்தது.. இதில் போப் ஆண்டவரின் பங்கு மகத்தானது- போற்றுதலுக்கும் உரியது!!
"ஏகாதிபத்திய" அமெரிக்காவோடு கை குலுக்குவதா? என 'கம்யூனிச' கியூபா தயங்காமல் முன்னேறி இருப்பது இனி ஒட்டுமொத்த உலக ஒழுங்கையே மாற்றி அமைக்கும் என்பதற்கான முதல் படிக்கட்டு...
"ஏகாதிபத்தியமும்" "கம்யூனிசமும்" எதிரிகள் என்றாலும் தத்தமது வழியில் இருவரும் நட்பாய் பயணிக்கவும் முடியும் என்பது 21-ம் ஆம் நூற்றாண்டுபடைத்திருக்கும் புதிய அத்தியாயமே!
ஆயுதமேந்தி 'கம்யூனிச தேசம்" அமைத்து சரித்திரம் படைத்துவிட்டு அமைதி வழியிலும் புதிய வரலாறு படைத்திருக்கும்"காம்ரேட்" பிடல் காஸ்ட்ரோவுக்கு "செவ்வணக்கம்"!!