போச்சே.. ஓபிஎஸ்க்கு அடுத்த அடி.. ஈரோடு கிழக்கில் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா..ஷாக்-பரபர காரணம்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் அணியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்பட 106 பேர் கூண்டோடும் ராஜினாமா செய்துள்ளனர். இது ஓ பன்னீர் செல்வத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பின்னணி காரணம் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் காலமானார். வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இரட்டை இலை போட்டி
இந்த தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். இதற்கிடையே தான் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என கூறியது. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் தென்னரசுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் அவர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இரட்டை இலையில் போட்டியிடுகிறார்.

ஓபிஎஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் தனது வேட்புமனுவை திரும்ப பெறுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது ஓ பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்மொழிந்தவர்களின் விபரங்களிலும் குழப்பம் இருந்ததாக கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் செந்தில் முருகன் வாபஸ் வாங்குவதற்கு முன்பே அவரது வேட்புமனு ஏற்கப்படவில்லை.

மற்றொரு அதிர்ச்சி
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்த முடியாதது என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வத்துக்கு இன்று அடுத்த அதிர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

கூண்டோடு ராஜினாமா
அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்பட 106 பேர் இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளனர். இதற்காக கடிதத்தை ஓ பன்னீர் செல்வத்துக்கு அவர்கள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பிரசாரம் செய்வாரா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் ராஜினாமா என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு மிகுந்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?
மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்பட 106 பேர் ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக முருகானந்தம் உள்ள நிலையில் அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் ஓ பன்னீர் செல்வம் அதனை ஏற்காமல் செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த முருகானந்தம் தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications