ஐயோ.. அந்தர் பல்டியடித்த எடப்பாடி.. “நல்ல மீன்கள் விற்கப்படும்” மாதிரி.. ஒரே நாளில் மாறிய 3 பெயர்கள்
பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை 3 முறை அந்த போர்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்பு வேட்பாளரை நேற்று காலை எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அவர்களின் தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று குறிப்பிட்டதன் மூலம் பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் 3 முறை அந்த போர்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது. இந்த நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கன்ஃபார்ம்.. இரட்டை இலை சின்னம் முடக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஓபிஎஸ் அணியும் அறிவித்தது!
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதனை தொடர்ந்து திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.
அதிமுக தாமதம்
அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த், தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.
பாஜகவின் முடிவு
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாஜகவின் முடிவுக்கு இரு தரப்பினரும் காத்திருப்பதாக தகவல் வெளியாகின. இந்த தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகின.
வேட்பாளரை அறிவித்த எடப்பாடி
ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முடிவை கேட்ட பிறகு அதிமுக வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள், அதிமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில் தங்கள் தரப்பு வேட்பாளர் யார் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
வேட்பாளர் யார்?
அதன்படி ஈரோடு கிழக்கு வேட்பாளராக சேலம் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக எம்.எல்.ஏவாக 2 முறை இருந்துள்ள கே.எஸ்.தென்னரசு பல ஆண்டுகளாக அதிமுகவில் அங்கம் வகித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நகர்வு பாஜகவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிர்ச்சியடைய செய்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி பெயர்
இதனை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை பேனரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வைக்கப்படும் "தேசிய ஜனநாயக கூட்டணி" என்ற பெயருக்கு பதில், "தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்ற பெயர் இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பேனரில் இடம்பெறவில்லை.
கூட்டணியிலிருந்து விலகலா?
அதேபோல் அண்ணாமலையின் முடிவே தங்கள் முடிவு என்று அறிவித்த ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோரின் படங்களும் இல்லை. மாறாக ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றன. இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு விலகியதாக தகவல் வெளியானது.
மாறிய பேனர்கள்
இந்த நிலையில் நேற்று மாலை அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்து, பாஜக போட்டியிட்டால் பின்வாங்கிக் கொள்வதாக கூறினார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் வைக்கப்பட்ட பேனரை 3 முறை எடப்பாடி தரப்பு பணிமனையில் மாற்றி இருக்கிறார்.
எடப்பாடி அந்தர் பல்டியா?
மதியம் 12 மணிக்கு வைக்கப்பட்ட பேனர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாலை 6 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலேயே பேனர் மாற்றப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் இரவு 9 மணிக்கு கூட்டணி பெயரையே குறிப்பிடாமல் தலைவர்கள் படத்துடன் பேனர் வைத்துள்ளார்கள். ஆனால், இந்த 3 பேனர்களிலும் பாஜக தலைவர்கள் படமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.