"நமது ஓபிஎஸ்.." சீறும் எடப்பாடி அணிக்கு மத்தியில்.. செங்கோட்டையன் சொன்ன அந்த வார்த்தை! கவனிச்சீங்களா
ஓபிஎஸ் தங்கள் அணி வேட்பாளரை வாபஸ் பெற்றதற்காக செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில், அவருக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நமது ஓபிஎஸ் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் அழைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தொடங்கிய விவாதம், இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ் அணி, தங்களது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அணியின் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கே ஆதரவு என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

செங்கோட்டையன் பேச்சு
இந்த நிலையில் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கேட்டு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நமது ஓபிஎஸ்
இதுகுறுத்து செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவளிப்பதாக நம்முடைய ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அவரது வேட்பாளரை வாபஸ் பெற்று கொண்டிருக்கிறார். அதன் மூலம் எங்களுக்கும் ஒளி பிறந்திருக்கிறது. ஆகவே, அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சனம்
அதிமுக பொதுக்குழுவில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி அணி பக்கம் இருப்பதால், ஓ.பன்னீர் செல்வத்திற்கு வேட்பாளரை வாபஸ் பெறுவதை தவிரத்து வேறு வழியில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதனிடையே செங்கோட்டையன் ஓபிஎஸ்-ஐ நம்முடைய ஓபிஎஸ் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்து வருகின்றார். ஓபிஎஸ் ஒவ்வொரு முறையும் இணைப்புக்கு அழைக்கும் போதும், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக தனது நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டையன் நமது ஓபிஎஸ் என்று பேசி இருப்பதால், அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications