டாஸ்மாக்.. மதுவிற்பனை இனி இப்படியா? குடிமகன்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர் முத்துச்சாமி
ஈரோடு: பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல 'டெட்ரா பேக்' மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் மதுவிற்பனை செய்வது குறித்து தமிழக அரசு நீண்ட நாட்களாக யோசித்து வருகிறது. பாட்டில்களை கண்ட இடங்களில் போடுவதால் விலங்குகள், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காணவே டெட்ரா பேக் மதுவை விற்க அரசு திட்டமிட்டு வருகிறது.

'டெட்ரா பேக்' மது என்பது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் மதுபானம் ஆகும். பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டை பெட்டிகளில் விற்பனை செய்வது போல மதுபானங்கள் சிறிய அட்டைபெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வது தான் டெட்ரா பேக் மதுவாகும். இதுபற்றி அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்..
ஈரோட்டுக்கு வியாழக்கிழமை என்று முத்தமிழ்த்தேர் வந்தது. அதற்கு வரவேற்பு அளித்த தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, தேரில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், தீபாவளி போன்ற பண்டிகையின்போது பொதுவாக எல்லா பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் மதுவிற்பனையும்.. அதற்காக திட்டமிட்டு மது விற்பனையை அரசு நடத்தப்படவில்லை. மது விற்பனையை தடுப்பதும் கடினம். மகிழ்ச்சிக்காக பலர் மது குடிக்கிறார்கள்.
எனினும் மக்கள் மது குடிப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குழு வைத்து குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்து 'கவுன்சிலிங்' கொடுத்து வருகிறோம். எனவே மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதுமே கிடையாது. மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே தமிழக அரசின் வேண்டுகோள் ஆகும்.
பாட்டில் பயன்பாட்டுக்கு பதில் குளிர்பானங்கள் அட்டைபெட்டிகளில் விற்பனை செய்வது போல டெட்ரா பேக்' மது விற்பனை நடைமுறை மற்ற மாநிலங்களில் உள்ளது. அதில் சில நன்மைகள் இருக்கின்றன. பாட்டில் பயன்பாட்டை குறைத்தால், விவசாயிகளுக்கான பிரச்சினை தீரும். அதுதொடர்பான ஆய்வு அறிக்கை பெறப்பட்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் 'டெட்ரா பேக்' மது விற்பனை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி தமிழகத்தில் மது விற்பனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது அறிவுறுத்தலின் படியே 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. ஒரேநாளில் மது குடிக்கும் பழக்கத்தை மாற்றிவிட முடியாது. பல நடவடிக்கைகளை புதிதாக செய்து வருகிறோம். அது வெற்றி பெறும்போது பிரச்சினைக்கு தீர்வு வரும். விதிமுறையை மீறி மது விற்பனை செய்யப்படுவதில்லை. அதுதொடர்பான புகார் தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications