ஈரோட்டில் பரபர.. மக்கள் அடைத்து வைப்பு? லைவ் செய்த செய்தியாளருக்கு அடி-பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
ஈரோட்டில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் சட்ட விரோதமாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் மீது தாக்குதல்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் அடைத்து வைத்திருப்பதாக கூறி அப்பகுதிக்கு சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் அங்கிருந்து நேரலை செய்ய தொடங்கினர். அப்போது அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

வலுக்கும் கண்டனம்
இந்த காட்சி நேரலையிலேயே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்
இதுகுறித்து அந்த அமைப்பின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் மும்முரமாகியுள்ளது. பல்வேறு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடைத்து வைக்கப்பட்ட வாக்காளர்கள்
இந்த நிலையில், இன்று 21-02-2023 செவ்வாய்க்கிழமை காலை "ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் KNK சாலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி வாக்காளர்களை மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளனர்." என்ற தகவல் கிடைக்கப் பெற்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.

செய்தியாளர் மீது தாக்குதல்
செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போதே அந்த செய்தி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது அடையாளம் காணக்கூடிய அரசியல் கட்சியினர் செய்தியாளர் ராஜேஷ்குமாரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோசமான தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications