"பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது”.. அட்டாக் செய்த ஸ்டாலின்!
ஈரோடு: "தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக துணை நிற்பவன் நான்தான்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், ரூ.15.7 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம். கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு 2 ஆம் இடம் வகிக்கிறது. * பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மேலும் திட்டங்கள் தருவோம்.
வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது. ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. டெல்டா பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைக்கும் முன் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.
விவசாயிகளால்தான் உணவு கிடைத்து, உடல் நலத்தோடு மக்கள் வாழ்கின்றனர். விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றினோம். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் தொடங்கினோம்.
விவசாயிகள் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. 1.86 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்துள்ளோம். இலவச மின்சாரத்திற்காக ரூ.26,223 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்தது.
3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அதிமுகவினர். தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக துணை நிற்பவன் நான்தான்.
பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப் போன்று தான் கடந்த அ.தி.மு.க ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் போராடினீர்கள் என்று நினைத்து பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகமானது.
உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அவர்கள். அதனால் தான் நீங்கள் தோற்கடித்தீர்கள்.
வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும்! அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications