அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கிச் சென்ற மகள்! ஷாக் சம்பவம்!
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழித்ததால், காலில் அடிபட்ட மூதாட்டியை அவரது மகளே தூக்கிச் சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாலை விபத்தில் காலில் காயமடைந்து நடக்க முடியாத நிலையில் தனது தாயாரை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பெண்மணி ஒருவர். வயதான தனது தாய் காலில் அடிபட்டதால் நடக்க முடியாத நிலையில் அவரை அங்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்பெண்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காமல் மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண், தனது தாயை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றார்.
தனது வயதான தாயை, பெண் தூக்கிச் சுமந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றதை மருத்துவமனையில் இருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
அரசு மருத்துவமனையில் மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்டு, பொதுமக்களை அலைக்கழிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மருத்துவத் துறையில் நாட்டின் பல மாநிலங்களை விட முன்னேறிய நிலையில் உள்ளது என்று நாம் பெரும் பேசி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள், இதுதான் நம் தமிழ்நாட்டு மருத்துவமனையில் நிலைமையா என்று தோன்றுவதாக நெட்டிசன்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மருத்துவரை விடாமல் பரிசோதனை என கூறி அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications