நாதக நிர்வாகியின் பேக்கரியை அடித்து நொறுக்கி சூறையாடிய திமுக கவுன்சிலர்.. ஈரோடு அருகே பரபரப்பு!
ஈரோடு: திமுக கவுன்சிலர், 10க்கும் மேற்பட்ட குண்டர்களுடன் சென்று நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் பேக்கரி கடையை இரவு நேரத்தில் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேக்கரியில் பொருட்கள் அனைத்தும் நொறுக்கப்பட்ட நிலையில், போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நேச்சுரல் பேக்கரி என்ற பெயரில் நித்தியகுமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரி செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் நசியனூர் பேரூராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலர் கோவேந்திரன் என்பவர் 10க்கும் மேற்பட்ட குண்டர்களோடு சென்று நித்தியகுமாரின் பேக்கரியை கட்டை மற்றும் இரும்பு ஆயுதங்களால் அடித்து நொறுக்கியுள்ளார்.

இதில் பேக்கரியில் இருந்த அனைத்து பொருட்களுமே அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குளிர்பானங்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. ஒரு பொருள் விடாமல் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சித்தோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் கடை நடத்திய நித்தியகுமார் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பது தெரிய வந்திருக்கிறது.

விசாரணையில், நித்தியகுமாருக்கும், திமுக கவுன்சிலர் கோவேந்தன் ஆகிய இருவருக்கும் கடையின் அக்ரிமென்ட் அவகாசம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் கடையை பேரூராட்சி கவுன்சிலர் அடித்து நொறுக்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications