செங்கோட்டையனின் கோட்டையில்.. கலகக்குரலால் அதிமுகவுக்கு பின்னடைவா.. கெத்து காட்டிய எடப்பாடி
ஈரோடு: அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக நீலகிரி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, கோபிசெட்டிப்பாளையன் பேருந்து நிலையத்தில் அக்கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர். செங்கோட்டையனின் கலகக்குரலால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாகவே இருந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதால், தென் மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு கலகக் குரல் செங்கோட்டையன் மூலமாக வெடித்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இந்த மாதம் முதல் வாரத்தில் அதற்கான காரணத்தை விளக்கினார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கையையும் முன் வைத்தார்.
அத்தோடு மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த குரலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிமுகவினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் இருந்து அதிகளவில் ஆதரவு இருந்தது. இதன்பின் திடீரென டெல்லி புறப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துவிட்டு வந்தார்.
இதன்பின் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து செங்கோட்டையனின் நடவடிக்கைக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஈரோடு மாவட்ட அதிமுகவில் சிக்கல் எழுந்துள்ளதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்திற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீலகிரி புறப்பட்டார். ஈரோடு வழியாக சென்ற போது, எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
செங்கோட்டையனின் கலகக்குரலால் ஈரோடு மாவட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் தலைமையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையன் தற்போது அமைதி காத்து வரும் சூழலில், அவரின் அடுத்தக் கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்று கேள்விகளும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications