செங்கோட்டையன் ஊரில் 10 ஆயிரம் பேரை கூட்டும் எடப்பாடி.. மேற்கு மண்டலத்தில் நிரூபிக்க அதிமுக திட்டம்!
ஈரோடு: செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் நடக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது நிரூபிக்க அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.
அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென சில நாட்களுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல் பொறுப்பாளர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தவெகவில் இணைந்த பின், கோபிசெட்டிப்பாளையம் வந்த அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவர் முன்னிலையில் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் தவெக புதிய உத்வேகத்துடன் செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 2வது கட்டத்தை தொடங்க உள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 8 முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் செங்கோட்டையன். அவரின் நீக்கத்திற்கு பின் அவரின் இடத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்க இருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதனால் செங்கோட்டையன் குறித்து மறைமுக விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் செங்கோட்டையனின் இடத்திற்கு வந்துள்ள அதிமுக நிர்வாகிகள், தாங்கள் இந்த பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலும் நெருங்கிவிட்டதால், அதிமுக வேகம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் இந்த பிரச்சாரத் தொடக்க பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை பங்கேற்க வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் உரக்க கூறும் வகையில், செங்கோட்டையனின் சொந்த ஊரில் இந்த பொதுக்கூட்டம் திட்டமிட்ட போதே அதிமுகவின் நோக்கம் என்னவென்பது பலருக்கும் புரியத் தொடங்கியது. இதற்காக பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதேபோல் போலீசார் சுமார் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications