தொண்டைக்குள் சிக்கிய "பின்னூசி".. துடிதுடித்த கன்னியப்பன்.. பாதுகாப்பாக அகற்றிய ஈரோடு மருத்துவர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த நபர் பின்னூசியை (safety pin) விழுங்கி உயிருக்குப் போராடிய நிலையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து உயிர்பிழைக்க வைத்து சாதனை செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 47 வயதான இந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர் பின்னூசியை (safety pin) விழுங்கியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு, கன்னியப்பனை அழைத்துக் கொண்டு வந்தார். உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கன்னியப்பனுக்கு உடனடியாக ஊடுகதிர் (X-Ray) பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொண்டைக் குழிக்கு கீழே அந்த சேப்டி பின் விரிந்த நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு மாற்றப்பட்டு அவருக்கு தொண்டை உள்நோக்கி கருவியின் (Endoscopy) உதவி கொண்டு வெற்றிகரமாக காயமின்றி மருத்துவர் ஸ்ரீதர் தலைமையிலான குழு மூலம் அந்த பின்னூசி அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கன்னியப்பன் வழக்கம் போல் உணவு உட்கொண்டு வருகிறார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.30,000/- வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு தந்தை பெரியார் அரசு பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை குறித்து கன்னியப்பன் கூறுகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான நவீன உபகரணங்கள் மூலம் உயிர் காக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ள வழிவகை செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications