சென்டிமென்ட்.. ஈரோடு கிழக்கில் சஞ்சயை களமிறக்க விரும்பாத ஈவிகேஎஸ் குடும்பம்? வெளியான பரபர காரணம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை துவக்கி உள்ளன. இந்த நிலையில் அந்த தொகுதியில் ஈவிகேஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான சஞ்சயை களம் இறக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தரப்பில் வேறு வேட்பாளரோ அல்லது திமுகவே களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் போட்டி?:
பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் இன்னும் யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. அதே நேரத்தில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் போட்டியிடும் என கூறுகின்றனர். மேலும், ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.
சஞ்சய் சம்பத்:
இதற்காக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே ஈவிகேஸ் இளங்கோவன் குடும்பத்தினர் மீது முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கரிசனத்தோடு இருக்கிறார். கடந்த தேர்தல்களில் திருமகன் ஈவேரா, இளங்கோவன் போட்டியிட்டபோது முழு ஆதரவு அவர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஈவிகேஸ் இளங்கோவளின் இளைய மகனான சஞ்சய் சம்பத் களமிறங்கினால் எவ்வித பிரச்சினையும் எழாது என்கின்றனர்.
விரும்பாத குடும்பத்தினர்:
அதே நேரத்தில் சஞ்சய் சம்பத் தேர்தலில் போட்டியிடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட இருவரை இழந்திருக்கும் நிலையில் மூன்றாவது தேர்தலை சந்திக்க அவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாக சஞ்சய் சம்பத்திற்கு ராஜ்யசபா சீட்டு கொடுத்து தேசிய அரசியலுக்கு அனுப்பலாம் என ஐடியா கொடுத்துள்ளனர் திமுகவினர்.
திமுக போட்டியா?:
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் இருக்கும் நிலையில் கடந்த முறை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த நிலையில் தற்போது அதனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஈரோடு உடன்பிறப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ரேஸில் இருக்கும் தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு வந்த சந்திரகுமார் களமிறக்கப்படலாம் என்கின்றனர். மேலும் அங்கு முதலியார் சமூக வாக்கு அதிகமாக இருக்கும் நிலையில் வெற்றி பட்டியலில் அவர் முன்னணியில் இருக்கிறார்.
வாக்காளர்கள் ஆர்வம்:
இதே போல மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் காத்திருக்கின்றனர். அதிமுக நிச்சயம் தேர்தலை புறக்கணிக்கும். இதனால் அதிமுகவின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக ஸ்டார் வேட்பாளரை தேடி வருகிறது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட யுவராஜா தற்போது பாஜக தரப்பில் போட்டியிடலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஜிகே வாசன் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் தமிழர் களமிறங்குவது உறுதியாக இருக்கும் நிலையில் திமுக கூட்டணிக்கான கூட்டணியின் அறிவிப்பு குறித்து ஈரோடு மக்கள் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications