ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் ஜன.17-ல் வேட்பு மனுத் தாக்கல்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வரும் 17-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இத்தேர்தலை அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் புறக்கணித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அவர் உடல்நலன் பாத்இக்கப்பட்ட நிலையில் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். இதனையடுத்து 4 ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் கடந்த 1௦-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20-ந் தேதி கடைசி நாள்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விசி சந்திரகுமார். பின்னர் திமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 17-ந் தேதி விசி சந்திரகுமார், வேட்பு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்.












Click it and Unblock the Notifications