அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என சீமான் பேச்சு- நாம் தமிழர் வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்
அருந்ததியர் குறித்த சீமான் சர்ச்சை பேச்சுக்காக நாம் தமிழர் வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் தேர்தல் அலுவலர்.
ஈரோடு: அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். மேனகா நவநீதனை ஆதரித்து சீமான், தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்த சீமான், , முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா?. அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் என்றார் சீமான்.
ஆந்திராவில் இருந்து வந்தேறிகளாக குடியேறியவர்கள் அருந்ததியர் என்பது சீமான் பேச்சு. இதனை வரலாற்று பக்கங்களில் இருந்துதான் தாம் பேசுவதாகவும் சீமான் கூறியிருந்தார்.
ஆனால் சீமான் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பிரசாரம் செய்யவும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினரை பிரசாரம் செய்ய அனுமதிக்காமல் அருந்ததியர் விரட்டியடித்தனர்.

சீமானின் இந்த் பேச்சுக்கு எதிராக தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் கொடுக்கப்பட்டது. சீமான் பிரசாராத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீமான் பேச்சு குறித்து உரிய விளக்கம் தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸுக்கு மேனகா நவநீதன் 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications