தகிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் மேனகா, தேமுதிகவின் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆம்பிளைதான என பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. திமுக கூட்டணி கட்சியினர் இதற்கு கடும் பதிலடி தந்து வருகின்றனர்.
இதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியரை ஆந்திராவில் இருந்து வந்த வந்தேறிகள் என விமர்சனம் செய்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் சீமானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்கு சேகரிக்கவும் அருந்ததியர் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அண்மைகாலமாக காங்கிரஸுடன்ம மிக நெருக்கமாக இருந்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையில் டெல்லியில் இணைந்து கொண்டார் கமல்ஹாசன். பின்னர் ராகுல் காந்தியுடனனா கமல்ஹாசனின் உரையாடல் பெரும் பேசுபொருளாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரஸை ஆதரிப்பாரா? இல்லையா? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். பின்னர் நடிகர் கமல்ஹாசனை ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார். தற்போது தேர்தல் பிரசாரத்துக்கும் வருகை தருகிறார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications