ரைட்டு விடுங்க.. ஈரோடு கிழக்கில் புதிய ரெக்கார்டு.. "நோ ஜீரோ.." அப்பாடா.. சுயேச்சைகள் நிம்மதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களும் குறைந்தபட்சம் ஒரு வாக்கையாவது பெற்றுள்ளனர். எந்த ஒரு வேட்பாளரும் பூஜ்ஜியம் பெறவில்லை
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 48 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். இதில் அனைத்து வேட்பாளர்களும் குறைந்தபட்சம் ஒரு வாக்கையாவது பெற்றுள்ளனர். எந்த ஒரு வேட்பாளரும் பூஜ்ஜியம் பெறவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும், தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டன.

5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தேர்தல் களத்தில் மொத்தம் 77 வேட்பாளர்கள் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547- வாக்காளர்கள் இருந்த நிலையில், 1, 70, 192 பேர் வாக்களித்தனர். அதாவது 74.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. சித்தோட்டில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படன.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
இன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தபால் வாக்குகளில் தொடங்கி அனைத்து சுற்றுக்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றுக்களாக செல்ல செல்ல ஆவரது வாக்கு வித்தியாசம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் தக்க வைப்பாரா? என்ற சந்தேகம் கூட மக்களுக்கு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சி
எனினும் அடுத்தடுத்த சுற்றுக்களில் கணிசமான வாக்குகளை பெற்று தொடர்ந்து 2-வது இடத்திலேயே இருந்த அதிமுக டெபாசிட் வாங்கியது. நாம் தமிழர் கட்சி 3- ஆம் இடமும், தேமுதிக 4 ஆம் இடம் பெற்றது. துவக்கத்தில் இருந்தே குறைவான வாக்குகளை பெற்று வந்த தேமுதிக 4 இலக்க எண்ணிக்கையை எட்டுமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. எனினும், வாக்கு எண்ணிககையின் கடைசி சுற்றுக்கள் நெருங்கும் போது ஆயிரம் வாக்குகளை தேமுதிக கடந்தது.

ஒரு வாக்கினையாவது பெற்ற சுயேட்சைகள்
இந்த தேர்தலை பொறுத்தவரை 77 வாக்களர்கள் களத்தில் இருந்தனர். இதில் பல சுயேட்சை வேட்பாளர்கள் பல சுற்றுக்கள் ஆகியும் ஒரு வாக்கு கூட பெற கடுமையாக போரடினர். ஆனாலும் அடுத்தடுத்த சுற்றுக்களில் சில ஓட்டுக்களை சுயேட்சைகள் பெற்றனர். இன்னும் சொல்லப்போனால் அனைத்து வேட்பாளர்களும் வாக்குகளை பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக ராஜேந்திரன், கீர்த்தனா என்ற சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு வாக்குகளை பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களில் முத்துபவா என்ற வேட்பாளர் அதிகபட்சமாக 321 வாக்குகள் பெற்றுள்ளார். பிரபல யூடியூபர் தீபன் சக்ரவர்த்தி 203 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 418 வாக்குகள் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications