சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்! ஈரோட்டில் ஷாக்
ஈரோடு: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தம்பதியினர் போலீஸில் தஞ்சமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (23). இவர் முத்தம்பாளையத்தை சேர்ந்த சுபஸ்ரீ(20) என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். இதனையடுத்து சமீபத்தில் நண்பர்கள் முன்னிலையில் இவர் காதலியை கரம் பிடித்திருக்கிறார். ஆனால் இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு ஏற்கனவே தெரிய வந்திருக்கிறது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவேதான் அவசர அவசரமாக திருமணம் நடந்திருக்கிறது. இதில் இருவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. நேற்று நள்ளிரவு இவர்கள் வீட்டிற்கு வந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணை தங்களுடன் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். அனுப்பவில்லை எனில் கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் தம்பதியினர் தஞ்சமடைந்துள்ளனர்.
காவல் நிலையத்தில் வைத்தே விக்னேஷ்வரன் மீது பெண் வீட்டார் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை பார்த்த சுபஸ்ரீ, காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். மட்டுமல்லாது தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமீப நாட்களாக தமிழகத்தில் சாதிய மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிதிருக்கின்றனர். கடந்த 2023ம் ஆண்டு மாணவன் சின்னதுரை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதை தொடர்ந்து புல்லட் பைக் ஓட்டியதற்காக பட்டியலின இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இப்படி இருக்கையில் ஈரோட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது விவாதமாகியுள்ளது.
காவல்துறையும், தமிழ்நாடு அரசும் சாதிய மோதல் விஷயத்தில் கறாராக நடந்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ஜனநாயக அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications