தமிழகமே உற்று கவனிக்கும் தொகுதி.. நாளை கோபியில் செங்கோட்டையன் வெல்வாரா? களநிலவரம் இதுதான்
ஈரோடு: தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இப்போது கோபிச்செட்டிப்பாளையம் இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் தவெக எனக் கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று தரப்பிற்குமே கோபியில் வெல்வது முக்கியமாக இருக்கும் சூழலில், அங்கு களநிலவரம் எப்படி இருக்கிறது.. யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அதிமுகவின் கோட்டை என்றே கொங்கு மண்டலத்தைச் சொல்லலாம். கடந்த முறை அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும் கூட கணிசமான தொகுதிகளைப் பெறக் கொங்கு மண்டலம் முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல பல காலமாகவே திமுக பலவீனமாக இருக்கும் மண்டலங்களில் ஒன்று தான் இந்த கொங்கு மண்டலம்.

கோபி தொகுதி
இந்த முறை கொங்கு மண்டலத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தனிக்கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் மற்ற தொகுதிகளைப் போல இல்லாமல் இந்த தொகுதியில் இந்த முறை மூன்று கட்சிகளுக்கும் இடையே நிஜமாகவே மும்முனை போட்டி இருக்கிறது. மூன்று தரப்பிற்குமே வெல்ல வாய்ப்பு இருப்பதால் போட்டி கடுமையாக மாறியிருக்கிறது.
கடந்த 1989 முதல் தொடர்ச்சியாக அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக, குறிப்பாக செங்கோட்டையனின் கோட்டையாகவே இருக்கும் தொகுதி இது. 1980 முதல் செங்கோட்டையன் தான் கோபி எம்எல்ஏவாக இருக்கிறார். 2001ல் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், அந்த தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் செங்கோட்டையன் வெற்றி வாகை சூடியிருக்கிறார். அப்போதெல்லாம் கோபியில் செங்கோட்டையன் இல்லாத அதிமுகவை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஆனால், தற்போதைய தேர்தல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது!
செங்கோட்டையன் vs எடப்பாடி
எடப்பாடி பழனிசாமியுடனான அதிகார மோதல் முற்றிக் கட்சியை விட்டே வெளியேறியுள்ளார் செங்கோட்டையன். விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்த செங்கோட்டையன், மீண்டும் கோபியில் போட்டியிடுகிறார்.. ஆனால், இந்த முறை விசில் சின்னத்தில்! தேர்தல் பிரச்சாரத்தின்போது எடப்பாடி vs செங்கோட்டையன் வார்த்தை மோதல் அனல் பறந்தது.
கோபியில் பிரச்சாரம் செய்யும்போது, செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்த எடப்பாடி, அவரை பற்றிப் பல ரகசியங்கள் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையனை பற்றிய ரகசியங்களை வெளியில் விட்டால் வெளியே நடமாடவே முடியாது என்றும் மக்கள் காரி துப்பிவிடுவார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த செங்கோட்டையன், "சாக்கடையில் கல்லை வீசினால் என்ன ஆகும்.. சாக்கடை நம்ம மேல அடிக்கும். நாற்றம் அடிக்கும்.. அதுபோல தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருக்கிறது" என மிக கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தளவுக்குத் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.
களம் எப்படி இருக்கு
செங்கோட்டையனின் பிரிவால் அ.தி.மு.க-வின் வாக்குகள் கணிசமாகப் பிரிகின்றன. இது இயல்பாகவே திமுகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. திமுக வரலாற்றிலேயே இதுவரை ஒருமுறை கூட அவர்கள் கோபியில் வென்றதே இல்லை. செங்கோட்டையன்- அதிமுக பிளவால் திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட். இருப்பினும், இரட்டை இலைக்கான வாக்குகள் வலுவாகவே இருப்பதால் தி.மு.க எளிதில் வென்றுவிடலாம் எனச் சொல்ல முடியாது. செங்கோட்டையன் + விஜய் பேக்டர் காரணமாக அவரும் ரேஸில் இருக்கிறார். இப்படி கடுமையான மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது.
யாருக்கு வாய்ப்பு!
வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.. எங்களுக்குச் சின்னமே முக்கியம்.. என இரட்டை இலை விசுவாசிகள் வாக்களித்து, செங்கோட்டையன் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக்கத் தவறினால், அ.தி.மு.க தனது கோட்டையைத் தக்கவைக்கும்.
விஜய் + செங்கோட்டையன் இதுவே தவெகவுக்கு பலம்.. செங்கோட்டையனுக்கு கோபி தொகுதியில் பெரியளவில் செல்வாக்கு இருக்கிறது. அத்தோடு விஜய் காரணமாக இளைஞர்களின் வாக்குகளும் வருவதால் அவர் வெல்லும் வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கிறது.
கடைசியாக திமுகவை பொறுத்தவரை.. அதிமுகவின் வாக்குகள் முழுமையாக செங்கோட்டையனுக்கும் போகாமல் இரட்டை இலைக்கும் போகாமல் பிரிந்தால்.. நடுவே திமுக எளிதாக வெல்லலாம்.. இதன் மூலம் முதல்முறையாக கோபியில் உதய சூரியன் உதயமாகலாம்!












Click it and Unblock the Notifications