''கோழி திருட வந்துவிட்டு ஜாதியை சொல்லி தப்பிக்கப் பார்ப்பதா? மொத்த கொங்கு மண்டலமும்..''! -ஈஸ்வரன்
ஈரோடு: திருடர்கள் மீது வழக்குப் போடுவதை விட்டுவிட்டு திருடர்களை பிடித்து கொடுத்த பொதுமக்கள் மீது வழக்கு காவல்துறையினர் வழக்குப் போடுவதா என கொங்கு ஈஸ்வரன் வினவியுள்ளார்.
இதன் பின்னணியில் ஒரு பெரிய கோழி கதையே உள்ளது. இது குறித்து ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் கடுக்காம்பாளையம் வெங்கமேட்டில் கோழி திருடிய திருடர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த ஊர் பொதுமக்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட முயற்சிப்பதாக தெரிய வருகிறது. இந்த முயற்சி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையும். கடுக்காம்பாளையம் வெங்கமேட்டில் வசித்து வரும் பழனியம்மாள் வீட்டின் வெளியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை திருடர்கள் அதிகாலை 2 மணிக்கு திருட வந்திருக்கிறார்கள். ''
''கோழி சத்தமும், நாய்கள் குறைக்கின்ற சத்தமும் கேட்டு வெளியில் வர முயற்சித்த பழனியம்மாள் வெளிப்புறமாக கதவு தாழ் இடப்பட்டிருப்பதை அறிந்து அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். ஜன்னல் வழியாக பார்த்த பொழுது இரண்டு பேர் கோழிகளை பிடித்திருப்பதை பார்த்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த பொழுது திருடர்கள் தப்பித்து ஓடுகிறார்கள். மேலும் அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்து இரண்டு பேரையும் துரத்தி பிடித்திருக்கிறார்கள்.''
''கோழி திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களை காவல்துறையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு மட்டுமல்லாமல் வேறு சில வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் திருடர்கள் என்று தான் ஊர் மக்களுக்கு தெரியும். என்ன ஜாதி என்று ஊர் மக்களுக்கு தெரியாது. இரண்டு நாட்கள் கழித்து சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக திருடர்கள் இரண்டு பேரையும் தூண்டி விட்டு ஊர் மக்கள் அவர்களை ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மனு கொடுக்க வைத்திருக்கிறார்கள்.''
''திருடர்கள் இரண்டு பேரும் அந்த ஊரை சாராதவர்கள் வேறு ஊரை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டியது. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர் குற்றங்களை செய்து கொண்டிருக்கின்ற இரண்டு திருடர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். காவல்துறை உண்மையை உணர்ந்து வழக்கு போட்டு செயல்பட துவங்கிய நேரத்தில் ஜாதி ரீதியாக, அரசியல் ரீதியாக அதை தடுக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிகிறோம். இந்த விஷயத்தில் காவல்துறை அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக நடந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும்.''
''வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு அமைதி பூங்காவாக இருக்கின்ற கொங்கு மண்டலத்தில் ஜாதிகளுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி அதில் அரசியல் லாபத்தை தேட முயற்சிக்கின்ற உள்நோக்கம் கொண்டவர்களை அடக்க வேண்டும். தைரியமாக திருடர்களை பிடித்து கொடுத்த பொதுமக்கள் மீது வழக்கு போட்டால் தன் சமூக கடமையை ஆற்றுவதற்கு எந்த பொது மக்களும் வரமாட்டார்கள். இதை போன்று வன்கொடுமை சட்டத்தில் பொய் வழக்குகள் போட முயற்சித்தால் மொத்த கொங்கு மண்டல மக்களும் எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ''
''காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் இது ஏதோ பொது பிரச்சனை போல் இரண்டு தரப்புகளுக்குமான அமைதி பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்று கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையதல்ல. இந்த வழக்கில் நேர்மையாக காவல்துறையின் செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றோம்.''












Click it and Unblock the Notifications