ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதுகுறித்து கூறுகையில், திமுக ஆட்சியின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்து வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறோம்.

மா சுப்பிரமணியன் பிரச்சாரம்
இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் திட்டங்களும் முதலமைச்சரின் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏறத்தாழ நானூறு கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால் பணிகள்
ஈரோடு மாநகராட்சியில் எந்த பகுதிக்கு சென்றாலும் மழைநீர் வடிகால் பகுதி பாதாள சாக்கடை விரிவாக்க பணி என ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால் சாலைகள் கூட சில இடங்களில் சேதம் அடைந்திருக்கின்றன. பாதாள சாக்கடையும் புதிய மழைநீர் வடிகால் பணியும் முடிவுற்றால் மீண்டும் அந்த சாலைகள் புதுப்பித்து தரப்படும். அந்தப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

கட்டமைப்புகள் மேம்பாடு
தேர்தல் முடிந்தவுடன் அந்த பணிகளும் செய்யப்படும். ஈரோடு மாநகராட்சி ஒரு மிகச்சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த முதலமைச்சர் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.
அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர்.

முதியோர் உதவித்தொகை
குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் ஏழரை லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரியவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், ஆண் வாரிசு இருந்தாலும் ஆதரவற்றவர்களாக இருந்தால் நிதி வழங்க வேண்டும் என கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications