ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட்
ஈரோடு: இன்றைக்கு வீடு கட்டி முடித்தவர்கள் அல்லது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டியவர்கள் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய, அவர்களது ஊரில் அதாவது நகராட்சி அல்லது ஊராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் போது, சிலர் லஞ்சம் கேட்பது நடக்கிறது. அப்படி லஞ்சம் கேட்பவர்களை கையும் களவுமாக சிக்க வைக்க முடியும். அப்படியான ஒரு சம்பவம் தான்
ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையம் ஊராட்சியில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள கொளத்துப்பாலையத்தைச் சேர்ந்த 52 வயதாகும் மாரிச்சாமி என்பவர், நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் 43 வயதாகும் தினேஷ். அவருடைய தந்தை சண்முகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் சண்முகம் பெயரில் உள்ள சொத்து வரிகளை தன்னுடைய பெயருக்கு மாற்றவேண்டும் என்று மாரிச்சாமியிடம் தினேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி லஞ்சமாக ரூ.6 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து தினேஷ் 'ஜிபே' (GPay) மூலம் மாரிச்சாமியின் வங்கிக் கணக்குக்கு ரூ.2 ஆயிரம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை அனுப்பினால்தான் சொத்து வரியை மாற்ற முடியும் என்று மாரிச்சாமி கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தினேஷ் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி தினேஷ் தன்னுடைய உறவினர் தமிழரசன் என்பவரிடம் ரூ.4 ஆயிரம் கொடுத்து மாரிச்சாமியிடம் கொடுக்கச் சொன்னாராம். தமிழரசன் நிச்சாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றபோது, மாரிச்சாமி ரூ.4 ஆயிரத்தை அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் தீபக் என்பவரிடம் தரச்சொன்னாராம்.
அதன்படி தமிழரசன், தீபக்கிடம் பணம் தரும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீபக்கை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாரிச்சாமிதான் பணத்தை வாங்கி வைக்கச் சொன்னதாக கூறினார். உடனே போலீசார் மாரிச்சாமியை பிடித்து தீவிரமாக விசாரித்தபோது சொத்து வரியில் பெயர் மாற்ற லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மாரிச்சாமியை கைது செய்தார்கள். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்களிடம் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய யாராவது லஞ்சம் கேட்டால் அதனை எந்த காரணம் கொண்டும் கொடுக்க வேண்டாம்.உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் சென்று லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களுடன் புகார் அளியுங்கள். அவர்கள் ரசாயணம் தடவிய நோட்டுகளை தந்து கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள். லஞ்சம் வாங்க முயன்ற அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அவர் இடத்திற்கு வேறு ஒருவர் வருவார்.. அவர் நிச்சயம் உங்களிடம் எந்த லஞ்சமும் வாங்காமல் சரியாக வேலையை செய்து கொடுப்பார்.
மக்களும் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க வேண்டும் .. உடனே வேலை முடிய வேண்டும் என்று லஞ்சம் கொடுப்பதும் தவறு.. அப்படி இருந்தால் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்க மாட்டார்கள். 52 வயதான அரசு ஊழியர் தற்போது லஞ்ச வழக்கில் சிக்கி உள்ளதால், அதில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையான சட்ட போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications