Seeman Periyar Issue: பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், 60 ஆண்டுகளாக தமிழர்களை இழிவு செய்தவர் பெரியார்; இதற்காகவே பெரியார் தொண்டர்கள் என்னிடம் மண்டியிட்டு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்; இந்த நிலப்பரப்பில் பெரியாரை இழிவு செய்து பேசிவிட்டேன் என்பதற்காக ஒரே நாளில் 100 வழக்குகளை சந்தித்த ஒரே நபர் நான் தான் என்றார். இதனிடையே சீமான் பிரசாரத்துக்கு தடை விதித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை தகுதி நீக்கம் செய்ய கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று ஈரோட்டில் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர் பிரசாரம் மேற்கொண்ட சீமான் இடைவிடாமல் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசினார்; தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் பெரியாரை சீமான் இழிவுபடுத்தி பேசியும் அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் என்பது சில பெரியார் தொண்டர்களின் கேள்வி.

இதன் உச்சமாக, தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என பகிரங்கமாக பிரசார மேடையில் கொலை மிரட்டல் விடுத்தார் சீமான். இது தொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோட்டில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துண்டு பிரசுரம் கொடுத்த தந்தை பெரியார் திகவினர் 2 பேரை நாம் தமிழர் கட்சியின் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் தேர்தலின் போது தம் மீது பெரியார் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினால் அனுதாப ஓட்டுகளைப் பெற முடியும் என சீமான் நினைக்கிறார்; அது நடக்காது; தேர்தலுக்கு பின்னர் வேண்டுமானால் அப்படி எதுவும் நடக்கலாம் என திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று பேசிய சீமான், 60 ஆண்டுகளாக தமிழர்களை இழிவுபடுத்திவிட்டார் பெரியார்; இப்படியான பெரியாரை விமர்சனம் செய்ததால் பெரியாரை நான் இழிவு செய்ததாக ஒரே நாளில் 100 வழக்குகளை என் மீது பதிவு செய்திருக்கின்றனர்; இந்த நிலப்பரப்பில் ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியது நான் தான். தமிழர்களை பெரியார் இழிவுபடுத்தியதற்காக பெரியார் தொண்டர்கள்தான் என்னிடம் மண்டியிட்டு பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பேசியிருப்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.
இதனிடையே சீமானின் பிரசாரத்துக்கு தடை விதிக்க கோரியும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் தமிழ்த் தேசிய கட்சியினர் நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications