1 லட்சம் பேர் வந்தாங்க.. பெரியார் மண்ணில் செங்கோல் கொடுத்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!
ஈரோடு: ஈரோட்டில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடியதாக அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் அதிமுகவின் பி டீமாக செயல்படுவதாக கூறிய செங்கோட்டையன், அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின், நேற்று ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கரூர் சம்பவத்திற்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் என்பதால், தவெகவினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தனர். அதேபோல் செங்கோட்டையன் அத்தனை ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்திருந்தார். அதேபோல் விஜய்யும் ஸ்பீக்கர் கம்பி மீது ஏறியவரை, உடனே இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தவெக பொதுக்கூட்டங்களில் இதுவரை இல்லாத ஒழுங்கு இம்முறை இருந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டச் செயலாளர் மேடையேற்றப்பட்டிருந்தார். விஜய்யை வரவேற்கும் பொறுப்பும் மாவட்டச் செயலாளர் வசம் அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் எப்படி இருக்கும் என்பதை தவெகவுக்கு முதல்முறையாக செங்கோட்டையன் நடத்தி காட்டி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒரு பொதுக்கூட்டம் மாநாடு போல் நடத்தப்பட்டது. தமிழ்நாடே வியக்கும் அளவிற்கு நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் புரட்சி தளபதி விஜய் உரையாற்றினார். வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. தற்போது சிறப்பான முறையில் பொதுக்கூட்டம் நடந்ததால், கோயில் வழிபாடு நடத்தினோம்.
தவெகவின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் குறைந்தது ஒரு லட்சம் பேர் வந்திருப்பார்கள். பெரியார் மண்ணில் பேசிய விஜய் கையில் செங்கோலை கொடுத்துள்ளோம். மக்களால் முதல்வராகப் போகும் அவரின் கையில் செங்கோலை ஒப்படைத்து சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றேன்.
அதிமுகவுடன் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். தேர்தல் களத்தில் தவெகவுக்கு என்ன வாக்கு வரும் என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள். நயினார் நாகேந்திரன் எப்போதும் பி டீமாக பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவினர் கூட இப்போது அதிகமாக பேசுவதில்லை. பாஜகவில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications