“நான் சாதாரண தொண்டன் அவ்வளவுதாங்க!” செய்தியாளர் சந்திப்பில் நழுவிக்கொண்ட செங்கோட்டையன்
ஈரோடு: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் இல்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நான் சாதாரண தொண்டன் என்று அவர் பதிலளித்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், பெயர் பட்டியலில் செங்கோட்டையன் இடம்பெறாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்ததாவது, "அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் துரோகிகள் சிலரால் தோல்வி ஏற்பட்டது என்று சொல்லி இருந்தேன். அந்தியூர் தொகுதியை மட்டும் தான் நான் குறிப்பிட்டேனே தவிர வேறு எந்த தொகுதியையும் நான் குறிப்பிடவில்லை. அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் ஓபனாகவே சில பேர் வேலை செய்தார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து, ஓபிஎஸ் அணியில் செங்கோட்டையனை சேர்த்துக் கொள்வதாக பேச்சுகள் எழுந்ததே அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதைப் பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அமைதியாக அவரவர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. நான் ஒரு சாதாரண தொண்டன்" என்று விளக்கமளித்துள்ளார்.
பின்னணி என்ன?:
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக விழா ஏற்பாட்டு விவசாயிகள் செங்கோட்டையனுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர். அதில், ஜெயலலிதா படம் இல்லையே என்று அவர் கேட்டிருந்தார். இந்த விவகாரம் கட்சியின் மேலிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தலைமை இதைபற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
இதனையடுத்து, எடப்பாடிக்கு நடத்தப்பட்ட விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவை புறக்கணித்ததாக பேச்சுகள் எழுந்தன. அதேபோல, செங்கோட்டையன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று எடப்பாடி வெளியிட்ட அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications