சுகங்களை அனுபவித்த சிலர்.. சுயநலத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.. கொந்தளித்த கேபி முனுசாமி!
சுயநலத்தால் அதிமுகவை சிலர் அழிக்க நினைப்பதாக கேபி முனுசாமி பேசியுள்ளார்.
ஈரோடு: அதிமுகவில் பதவியில் இருந்து பல்வேறு சுகங்களை அனுபவித்த சிலர், தற்போது சுயநலத்திற்காக இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்று கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிக முக்கியமானது என்றும், தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக வெற்றி உறுதி என்றும் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் அதிமுகவினர் இடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதன் விசாரணை பிப்.3ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே ஈரோடு இடைத்தேர்தலில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது.
காதெல்லாம் கூசுதே.. கோயிலுக்கு சென்ற தலித் இளைஞரை திட்டி தீர்த்த சேலம் திமுக நிர்வாகி சஸ்பெண்ட்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இருப்பினும் ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, இடைத்தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஈரோட்டில் அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணியாற்றுவதற்காக குவிந்து வருகின்றனர்.
பூத் கமிட்டி ஆலோசனை
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் காரைவாய்க்காலில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான கேபி அன்பழகன் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கேபி அன்பழகன் பேசுகையில், எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய போது தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.
அதிமுக அழிக்க முயற்சி
தற்போது பல்வேறு வழிகளில் நம் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று அதிமுகவில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அதனால் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து கேபி முனுசாமி பேசுகையில், தமிழ்நாடு வரலாற்றிலேயே நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல்.
சுயநலம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவுக்கு பெரும் வெற்றியை பெற உழைக்க வேண்டும். அதிமுகவில் பல்வேறு சுகங்களை பெற்றவர்கள் தனது சுயநலத்திற்காக இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள். மக்களுக்கு அதிமுக தொந்தரளவு அளிக்கவில்லை. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தால், அதிமுகவுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.