ஓய்வேன் என நினைத்தாயோ? அரசியலுக்குதான் குட்பை.. பெரியாரிஸ்டாக களமிறங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்!
ஈரோடு: தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இப்போது மதவாத எதிர்ப்பு, திக சார்பு நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வியைத் தழுவினார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவரது இந்த தோல்வி திமுக தலைமைக்கே அதிர்ச்சி தந்தது. திமுக மாவட்ட உள்ளடி அரசியல், நாம் தமிழர் கட்சி, மநீம ஆகியவற்றின் வாக்கு பிரிப்பு என சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்விக்கு காரணங்கள் சொல்லப்பட்டன. சுப்புலட்சுமி ஜெகதீசன் வென்றிருந்தால் தமிழ்நாட்டின் முதலாவது பெண் சபாநாயகர் என்கிற சரித்திரத்தை உருவாக்கியிருப்பார் என்பது திமுகவினர் கருத்து.

உட்கட்சி நெருக்கடி
சட்டசபை தேர்தல் தொடர்பான கசப்பான அனுபவங்களை சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர், ஜெகதீசன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரங்கமாக எழுதி வந்தார். இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை. அதனால் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஓரம்கட்டவும் இல்லை. ஆனாலும் திமுகவில் தொடர்ந்தும் அவரால் நீடிக்க முடியாத அளவுக்கு உட்கட்சி நெருக்கடி ஏற்பட்டது.

திமுகவில் இருந்து விலகல்
இதனால் "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப்பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு, அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில், பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை தலைவருக்கு அனுப்பிவிட்டேன்" என அறிக்கை வெளியிட்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன். திமுகவில் இருந்தும் தீவிர வாக்கு அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

கட்சி தாவல் கிடையாது
இதன்பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுக- பாஜகவில் நான் சேரப் போவது இல்லை; நான் சேருகிற அளவுக்கு பாஜக- அதிமுக தகுதியான கட்சிகள் இல்லை என்றார். அத்துடன் பாஜகவின் உண்மையான மதவெறி முகத்தை அம்பலப்படுத்துவேன் என்றார். தீவிர பெரியாரிஸ்டான சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதற்காக தடா சிறைவாசத்தை அனுபவித்தவர். திமுகவில் இருந்து விலகிய நிலையில் திக அல்லது பெரியாரியக்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவார் என கூறப்பட்டது.

களத்தில் சுப்பக்கா
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் முன்னெடுத்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் பேரணியில் கறுப்பு உடையுடன் ஒரு பெரியாரிஸ்டாக சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர், பழைய கோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் (மன்றாடியர்) நூற்றாண்டு நினைவு விழா நிகழ்ச்சி ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் திராவிடர் கழகத்தின் கறுப்பு உடையுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார். திமுகவில் இருந்து விலகினாலும் தாம் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் என்ற 'சுப்பக்கா' பங்கேற்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications