புதிய சாலையை திறந்து வைத்த சிறுமி... வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமியின் பெருந்தன்மை..!
ஈரோடு: ஈரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை விபத்தில் தந்தையை பறிகொடுத்த சிறுமி ஒருவர், அமைச்சர் முத்துச்சாமி முன்னிலையில் திறந்து வைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கை. ஆனால் அது கடந்த மே மாதம் வரை நிறைவேற்றப்படாததால் 45-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் அங்கு நிகழ்ந்திருக்கின்றன.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் மற்றும் சபரி என்ற இருவரும் பழுதடைந்த சாலையில் டூவிலரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த அவர்கள் இருவரது குடும்பத்தினரும் இதுபோன்ற ஒரு விபத்து இனி ஏற்படக்கூடாது என்பதை எண்ணி தொடர்ந்து சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் குடும்பத்தினர் முன்னெடுத்த தொடர் முயற்சியின் காரணமாக அமைச்சர் முத்துச்சாமியின் கவனத்துக்கு இந்த விவரம் சென்றிருக்கிறது. இதையடுத்து அந்த சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், சாலையை சீரமைக்க மின்னல் வேக நடவடிக்கை மேற்கொண்டார்.
முத்துச்சாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜிக்கு வெயிட்டான போஸ்ட்.. மறைந்திருக்கும் ஸ்டாலின் மெசேஜ்!
அடுத்த நான்கே நாட்களில் சாலை பளபளவென புதிதாக மாறியது. இதையடுத்து அந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தாமதமின்றி திறந்து வைக்க வந்த அமைச்சர் முத்துச்சாமி, சாலை சரியில்லாமல் இருந்தபோது தந்தையை விபத்தில் பலி கொடுத்த சிறுமியை அழைத்து சாலையை திறந்து வைக்குமாறு கூறினார்.
அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தயங்கியபோதும் கூட, ''இந்தச் சாலையை திறந்து வைக்க என்னை விட நீ தான் பொருத்தமான நபர்'' எனக் கூறி தனது பெருந்தன்மையையும், அரசியல் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார் அமைச்சர் முத்துசாமி.
கல்வெட்டில் பெயர் சிறியதாக உள்ளது, நான் வரும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என கணக்கு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இதுபோன்ற யதார்த்த நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.