செங்கலோடு முடியல.. உதயநிதி காட்டிய 4 போட்டோக்கள்.. அப்பப்பா.. எடப்பாடி, பாஜக மீது சரமாரி அட்டாக்!
மதுரை எய்ம்ஸ் செங்கலோடு மேலும் சில போட்டோக்களையும் காட்டி பாஜகவை விமர்சித்துள்ளார் உதயநிதி.
ஈரோடு : ஈரோடு கிழக்கு பிரச்சாரக் களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலோடு இந்த முறை 4 போட்டோக்களையும் லேமினேட் செய்து கையோடு கொண்டு வந்து காட்டி அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கலைக் காட்டி பிரச்சாரம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த முறை மேலும் 4 போட்டோக்களோடு களமிறங்கியுள்ளார் உதயநிதி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று மாலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

உதயநிதி பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் மத்தியில் பேசினார் உதயநிதி ஸ்டாலின். இந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியையும், பாஜக அரசையும் தனது ஸ்டைலில் கேலியும், கிண்டலுமாக கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மீசை - விளாசிய உதயநிதி
கருணாநிதியின் பேரன் பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன் என்று ஒவ்வொரு பகுதியிலும் உரக்கச் சொன்ன உதயநிதி ஸ்டாலின், அதிமுக வேட்பாளரை ஓட்டு கேட்க விடாமல் விரட்டி அடிக்கிறார்கள். அதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. அந்த விரக்தியில் இங்கு வந்து ஆம்பளையா இருந்தா.. மீசை வச்சிருந்தா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 நாள் ஷேவ் பண்ணலைனா எல்லாருக்கும் தான் மீசை இருக்கும், இரு பெண்களின் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டதுதான் அவரது மீசை என விளாசித் தள்ளியுள்ளார் உதயநிதி.

போட்டோவை காட்டிய உதயநிதி
மேலும், எடப்பாடி பழனிசாமி, சசிகலாவால் முதல்வராக அறிவிக்கப்பட்டபோது, அவரது காலில் ஈபிஎஸ் விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை லேமினேட் செய்து கொண்டு வந்து காட்டி ஈபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்துள்ளார் உதயநிதி. தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போது அந்த மீசை என்ன செய்தது? நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். தரையில் தவழ்ந்து சசிகலா பாதம் தொட்டு பதவி பெற்ற பழனிசாமி மீசை, வேட்டி, மானம் குறித்து பேசலாமா? என அந்த போட்டோவை காட்டி கேள்வி எழுப்பினார் உதயநிதி.

மேலும் 3 போட்டோக்கள்
மேலும் 3 போட்டோக்களைக் காட்டி பாஜகவை விளாசினார் உதயநிதி ஸ்டாலின். 4 ஆண்டுகள் ஆகியும் கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் அமையவிருக்கும் இடம் வெட்டவெளியாக இருக்கும் புகைப்படம், சென்னையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் உருவாகி வரும் கலைஞர் நூலகம் ஆகியவற்றின் புகைப்படங்களைக் காட்டி, எய்ம்ஸ் பணிகளை தாமதப்படுத்தும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார் உதயநிதி.

பாருங்க இதுதான்..
திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளில் சென்னையில் ரூபாய் 240 கோடியில் கிங்ஸ் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் ஆறு மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. 2019-ல் பிரதமர் மோடி மதுரைக்கு வந்து ரூபாய் 3000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்தார். அதற்காக 300 கோடி செலவு செய்தார்கள். ஆனால் பாருங்கள்.. இதுதான் அதிமுகவும், பாஜகவும் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று செங்கலையும், வெட்டவெளியாக இருக்கும் எய்ஸ்ம் அமையவிருக்கும் இடத்தின் போட்டோவையும் காட்டினார் உதயநிதி.












Click it and Unblock the Notifications