இடைத்தேர்தல் : திமுக கூட்டணிக்காக களமிறங்கிய 6 அமைப்புகள்.. ஃபார்வர்டு பிளாக், அதிமமுக ஆதரவு!
திமுக கூட்டணிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் பி.வி.கதிரவன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். திமுக கூட்டணிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே, திமுகவினர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கத் தொடங்கினர். திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணி வேட்பாளருக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வீடு வீடாக திண்ணை பிரச்சாரம்.. திமுக சாதனைகளை கூறும் மா.சுப்பிரமணியன்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மேலும், தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக தனித்து போட்டியிடுகின்றன. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்டு திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கட்சிகள் ஆதரவு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று, அகில இந்திய பார்வர்டு பிளாக், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், மண்பாண்ட தொழிலாளர் சங்கம், நிலத்தரகர் சங்கம், அருந்ததியர் மக்கள் நல சங்கம், போக்குவரத்து அனைத்து தொழில் பிரிவு தொழிலாளர், தொழிலாளர்கள் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் ஆகியவை திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
ஃபார்வர்டு பிளாக்
இதுக்குறித்து திமுக வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பின்வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
1.அகில இந்திய பார்வர்ட் பிளாக் (தமிழ் மாநிலக்குழு) - (மாநில பொதுச்செயலாளர், தேசிய துணைத்தலைவர் பி.வி.கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ.,)
2. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் (நிறுவனர், பொதுச்செயலாளர் - சே.பசும்பொன்பாண்டியன்)
அமைப்புகள் ஆதரவு
3. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் (மாநிலத் தலைவர் டாக்டர் சேம.நாராயணன்)
4.இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச் சங்கம் (அகில இந்திய தலைவர் - விருகை வி.என்.கண்ணன்)
5.தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் அனைத்து தொழில் பிரிவு தொழிலாளர்கள் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் (பொதுச்செயலாளர் எம்.கோவிந்தராஜ்)
6. அருந்ததியர் மக்கள் நலச் சங்கம் (நிறுவனர், தலைவர் வேடவாக்கம் சி.சீனிவாசன்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவாக பிரச்சாரம்
முன்னதாக, சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் பிரசாரத்தில் ஈடுபடும் எனத் தெரிவித்தார். அக்கட்சி சார்பில், தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பதாக ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.